கர்நாடகத்தின் நீர்த் தேவை எவ்வளவு? இன்று ஆய்வு!
பெங்களூர்: உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி, மத்திய நீர்வளத் துறை சார்பில் அமைக்கப்பட்டுள்ள காவிரி உயர் தொழில்நுட்பக் குழு கர்நாடக அணைகளில் வெள்ளி, சனிக்கிழமைகளில் ஆய்வு மேற்கொள்கிறது.
கர்நாடகத்தின் குடிநீர், பாசனத்துக்கு எவ்வளவு தண்ணீர் தேவையுள்ளது என கள ஆய்வு மேற்கொள்ளும் இந்தக் குழு, வரும் 17-ஆம் தேதி நீதிமன்றத்தில் அறிக்கையைத் தாக்கல் செய்கிறது.
மத்திய நீர்வளத் துறை அமைச்சகம் கடந்த 4-ஆம் தேதி மத்திய நீர் ஆணையத் தலைவர் ஜி.எஸ்.ஜா தலைமையில் காவிரி உயர் தொழில்நுட்பக் குழுவை அமைத்தது.
இதில் மத்திய நீர் ஆணைய உறுப்பினர் ஜி.மசூத்ஹுசேன், ஹைதராபாத்தைச் சேர்ந்த கிருஷ்ணா மற்றும் கோதாவரி அமைப்பின் தலைமை பொறியாளர் ஆர்.கே.குப்தா, தமிழகம் மற்றும் கர்நாடக மாநிலங்களைச் சேர்ந்த தலைமைச் செயலாளர்கள் அல்லது அவர்களது பிரதிநிதிகள், தமிழகம், கர்நாடகம், கேரளம், புதுச்சேரி மாநிலங்களின் தலைமை பொறியாளர்கள் உள்ளிட்டோர் இடம் பெற்றுள்ளனர்.
இந்தக் குழு வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் (அக். 7,8) கர்நாடகத்தில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு காவிரி நதிப் படுகையில் அமைந்துள்ள அணைகளைப் பார்வையிடுகிறது.
8-ஆம் தேதி கர்நாடக சுற்றுப்பயணத்தை முடித்துக் கொண்டு, அன்றைக்கே தமிழகத்தின் மேட்டூர் அணைக்குச் சென்று அங்குள்ள நிலையை ஆய்வு செய்கிறது.