திருந்தாத கர்நாடகா.. நாளை மீண்டும் சட்டசபையைக் கூட்டி புதுத் தீர்மானம் போடுகிறது
பெங்களூரு: உச்சநீதிமன்றம் மிகக் கடுமையாக விமர்சித்தும், கடைசி சான்ஸ் என்று பகிரங்கமாக எச்சரித்தும் கூட சற்றும் திருந்தாத அல்லது திருந்த முன்வராத கர்நாடக அரசு நாளை மீண்டும் ஒரு சட்டசபை சிறப்புக் கூட்டத்தைக் கூட்டியுள்ளது. இந்தக் கூட்டத்தில் என்ன மாதிரியான தீர்மானத்தை அது போடப் போகிறது என்பது தெரியவில்லை.
தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விடுவதில்லை என்பது உறுதியாக இருக்கிறது கர்நாடக அரசு. உச்சநீதிமன்றம் கடுமையாக எச்சரித்தும் கூட தனது நிலையிலிருந்து மாற அது விரும்பவில்லை. அரசியல் சாசன சட்டத்திற்கும், தேசிய ஒருமைப்பாட்டுக்கும், உச்சநீதிமன்றத்திற்கும் அது பகிரங்கமாக சவால் விட்டுள்ளது.
சட்டத்தை மதிக்கும் அனைவரும் கர்நாடக அரசின் இந்த திமிர்வாதப் போக்கைக் கண்டு அதிர்ந்து போயுள்ளனர். கர்நாடகத்திற்கு எதிராக மத்திய அரசு வாயே திறக்காமல் உள்ளது. மோடி வாயை மூடிக் கொண்டிருக்கிறார். அவரது அமைச்சரவையில் உள்ள பாஜகவின் சதானந்த கெளடா, அனந்தகுமார் ஆகியோர் கர்நாடக அரசுக்கு சாதகமாக பச்சையாக பேசுகின்றனர், செயல்படுகின்றனர். இதையும் பார்த்துக் கொண்டு அமைதியாக இருக்கிறார் பிரதமர் மோடி.
மீண்டும் சிறப்புக் கூட்டம்
இந்த நிலையில் நாளை மீண்டும் ஒரு சிறப்பு சட்டசபைக் கூட்டத்தைக் கூட்டியுள்ளது கர்நாடக அரசு. இந்தக் கூட்டத்திலும் உச்சநீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராகவே முடிவெடுத்து தீர்மானம் போடவுள்ளனர் என்று தெரிகிறது.
அனைத்துக் கட்சிக் கூட்டம்
பெங்களூரில் நடந்த அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி நாளை சட்டசபை சிறப்புக் கூட்டம் கூட்டப்பட்டுள்ளது. இந்தக் கூட்டத்தில் கர்நாடக அரசு எடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்து அரசுத் தரப்பில் முதல்வர் சித்தராமையா விளக்கிப் பேசவுள்ளார். மற்ற கட்சிகளும் பேசவுள்ளன. அதன் இறுதியில் மீண்டும் தீர்மானம் கொண்டு வருவார்கள் எனத் தெரிகிறது.
தண்ணீர் தருவதா இல்லையா
இந்தக் கூட்டத்தில் தமிழகத்திற்குத் தண்ணீர் திறப்பதா இல்லையா என்பது குறித்து முடிவெடுக்கப்படவுள்ளதாக முதல்வர் சித்தராமையா கூறியுள்ளார். மேலும் அவர் கூறுகையில் உச்சநீதிமன்ற உத்தரவை நாங்கள் மீறவில்லை. எதிர்க்கவில்லை. நாங்கள் பிடிவாதமாக இருக்கிறோம் என்றும் கூற முடியாது. சட்டசபைத் தீர்மானத்திற்கேற்பவே நாங்கள் செயல்படுகிறோம் என்று பேசுகிறார் சித்தராமையா.
ஆகஸ்ட் 6ம் தேதி வரை இப்படித்தான்
அக்டோபர் 1ம் தேதி முதல் 6ம் தேதி வரை தமிழகத்திற்கு தினசரி விநாடிக்கு 6000 கன அடி நீர் திறக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது. 4ம் தேதிக்குள் காவிரி மேலாண்மை ஆணையத்தை அமைக்கவும் உத்தரவிட்டுள்ளது. ஆனால் கர்நாடக சொன்னபடி தண்ணீர் திறக்காமல் உள்ளது. முடியாது என்றும் கூறி விட்டது. மேலாண்மை வாரியத்தில் இணைய மாட்டோம் என்று பச்சையாக சுப்ரீ்ம் கோர்ட்டைக் கேவலப்படுத்தி விட்டது.
சுப்ரீம் கோர்ட் என்ன செய்யப் போகிறது
6ம் தேதி வரை கர்நாடகம் அந்தக் கூட்டம், இந்தக் கூட்டும் என்று மாறி மாறி நடத்துமே தவிர உத்தரவை நிறைவேற்றாது என்பது உறுதியாகி விட்டது. இனி உச்சநீதிமன்றம் என்ன நடவடிக்கை எடுக்கப்போகிறது என்ற எதிர்பார்ப்பில் மக்கள் உள்ளனர்.