காவிரி நீரை தமிழகத்துக்கு திறந்துவிட காரணம் இதுதான்... சொல்வது சித்தராமையா
சுப்ரீம் கோர்ட் உத்தரவின் பேரிலேயே தமிழகத்துக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது என்று கர்நாடகா முதல்வர் சித்தராமையா தெரிவித்தார்.
பெங்களூர்: சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டதன் பேரில் தமிழகத்துக்கு தண்ணீர் திறந்து விடப்படுகிறது என்று முதல்வர் சித்தராமையா தெரிவித்தார்.
கிருஷ்ண ராஜ சாகர் மற்றும் கபினி அணைகளில் இருந்து கடந்த மாதம் 30-ஆம் தேதியிலிருந்து தமிழகத்துக்கு வினாடிக்கு 3 ஆயிரம் கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மாண்டியா மற்றும் மைசூரு மாவட்டங்களில் விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இதனால் பெங்களூரு- மைசூரு மாநில நெடுஞ்சாலையில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. தமிழகத்துக்கு தண்ணீர் ஏன் திறக்கப்பட்டது என்பது குறித்து ஹசன் மாவட்டத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட முதல்வர் சித்தராமையா நேற்று விளக்கமளித்துள்ளார்.

நல்ல மழை
அப்போது அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், தற்போது மழை பெய்ய தொடங்கியுள்ளது. எனினும் அணைகள் நிரம்பவில்லை. சில நாள்கள் பார்த்துவிட்டு அதன்பிறகு செயற்கை மழை பெய்விக்கப்படும். இதற்கான டெண்டர் விடும் பணிகள் தொடங்கியுள்ளோம்.

சுப்ரீம் கோர்ட் உத்தரவு
தமிழகத்துக்கு தண்ணீர் திறந்துவிட வேண்டும் என்பதற்காக நாங்கள் தண்ணீர் திறக்கவில்லை. சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டதன் பேரில் தண்ணீர் திறந்துள்ளோம். தண்ணீர் திறக்கவில்லையெனில் தமிழக அரசு சுப்ரீம் கோர்ட்டுக்கு செல்லும். கர்நாடகாவுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாத வகையில்தான் தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது.

மத்திய அரசுக்கு விண்ணப்பம்
மேகதாதுவில் புதிய அணை கட்டுவதற்காக விரிவான திட்ட அறிக்கை தயாரித்துள்ளோம். அதை மத்திய நீர் ஆணையத்துக்கு அனுப்பி வைத்துள்ளோம். இதற்கு மத்திய அரசு அனுமதி வழங்கும் என்ற நம்பிக்கை உள்ளது. மேகதாது அணைக்கு தமிழகம் எதிர்ப்பு தெரிவித்துதான் வருகிறது.

தமிழகத்தின் அனுமதி தேவையில்லை
காவிரி நடுவர் மன்ற தீர்ப்பின்படி தமிழகத்திற்கு தண்ணீர் வழங்கவே மேகதாதுவில் புதிய அணை கட்ட முடிவு செய்துள்ளோம். தமிழக அரசு எப்போதும் உண்மையை ஒப்புக்கொள்வது இல்லை. இந்த அணை கட்ட எந்த குறுக்கீடும் இல்லை. இதற்கு தமிழகத்தின் அனுமதி தேவையில்லை. மத்திய நீர் ஆணையம் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ளது என்றார் அவர்.












Click it and Unblock the Notifications