காவிரி: உமா பாரதி தலைமையிலான சமரச கூட்டத்தில் எந்த முடிவும் எட்டப்படவில்லை
டெல்லி : மத்திய நீர்வளத்துறை அமைச்சர் உமா பாரதி தலைமையில் டெல்லியில் நடைபெற்ற காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பான சமரசக் கூட்டத்தில் எந்த முடிவும் எட்டப்படவில்லை. தமிழகம், கர்நாடகா ஆகிய இரு மாநில அரசுகளும் தங்களின் நிலையில் பிடிவாதமாக இருந்ததால் எந்த முடிவும் எட்டப்படவில்லை என்று உமா பாரதி கூறியுள்ளார். கூட்டம் தொடர்பாக மத்திய அரசின் அறிக்கை நாளை உச்சநீதிமன்றத்தில் அளிக்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.
தமிழகத்தில் சம்பா சாகுபடிக்கு தேவையான காவிரி நீரை திறந்து விட உத்தரவிடக்கோரி உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மனுதாக்கல் செய்தது. இந்த வழக்கில் காவிரியில் கடந்த 27ம்தேதி வரை வினாடிக்கு 6000 கன அடி தண்ணீர் திறந்து விட வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால் கர்நாடகம் தமிழகத்துக்கு தண்ணீர் திறக்க மறுத்து விட்டது.

27ம் தேதி இந்த வழக்கு மீண்டும் உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. இதைத் தொடர்ந்து 30ம் தேதி வரை வினாடிக்கு 6 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறக்க வேண்டும் என்று உத்தரவிட்ட உச்சநீதிமன்றம் கர்நாடக மாநில அரசின் செயலுக்கு கண்டனம் தெரிவித்தது. இரு மாநிலங்களுக்கு இடையே பேச்சுவார்த்தைக்கு மத்திய அரசு ஏற்பாடு செய்ய வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
இதையடுத்து டெல்லியில் இன்று தமிழக - கர்நாடக அரசுகளின் பேச்சு வார்த்தைக்கு மத்திய நீர் வளத்துறை அமைச்சகம் ஏற்பாடு செய்தது. அதன்படி இன்று காலை டெல்லியில் மத்திய நீர்வளத்துறை அமைச்சர் உமா பாரதி தலைமையில் காவிரி நீர் பங்கீடு தொடர்பான சமரச கூட்டம் நடந்தது.
இந்த கூட்டத்தில் தமிழகம் சார்பில் பொதுப்பணித்துறை அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, தலைமை செயலாளர் ராமமோகன்ராவ், பொதுப் பணித்துறை முதன்மை செயலாளர் எஸ்.கே.பிரபாகர், காவிரி தொழில்நுட்ப பிரிவு தலைவர் ஆர்.சுப்பிரமணியன் ஆகியோர் பங்கேற்றனர். உடல் நலக்குறைவு காரணமாக இந்த கூட்டத்தில் முதல்வரால் பங்கேற்க முடியாததால், அவரின் உரையை அவர் சார்பில் அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி வாசித்தார்.
கர்நாடகா சார்பில் முதல்வர் சித்தராமையா, நீர்வளத்துறை அமைச்சர் எம்.பி.பாட்டீல், தலைமைச் செயலாளர், மாநில நீர்ப்பாசனத்துறை அதிகாரிகள் உள்ளிட்ட 5 பேர் குழு கலந்து கொண்டனர். தமிழகத்திற்கு தண்ணீர் தரமுடியாது என்று பிடிவாதமாக தெரிவித்தார் சித்தராமைய்யா.
இதனையடுத்து காவிரி விவகாரத்தில் தமிழகம், கர்நாடகம் மாநிலங்களில் உள்ள அணைகளின் நீர்இருப்பு மற்றும் மழை அளவு குறித்து ஆராய நிபுணர் குழு அமைக்க மத்திய அமைச்சர் உமா பாரதி பரிந்துரைத்தார். இதனை ஏற்க தமிழக அரசு மறுத்து விட்டது. சமரச பேச்சு வார்த்தை எந்த முடிவும் எட்டப்படாமலேயே முடிவடைந்தது.
காவிரி கூட்டத்துக்கு பிறகு டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய நீர்வளத்துறை அமைச்சர் உமா பாரதி, இன்று நடந்த கூட்டத்தில் சுமூக தீர்வு ஏற்படவில்லை என உமாபாரதி கூறியுள்ளார். அணைகளை ஆய்வு செய்ய குழு அமைக்க கர்நாடகா சொன்ன யோசனையை தமிழகம் ஏற்கவில்லை. மேலும் கூட்டத்தில் இன்று நடந்த விஷயங்களை உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவிக்கும். மேலும் நீதிமன்றத்துக்கு வெளியே பேசி காவிரி பிரச்சனையை தீர்க்கும் முயற்சியில் முன்னேற்றம் இல்லை எனவும் உமா பாரதி தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications