எதுவும் சிக்கவில்லை.. நீரா ராடியா டேப் விசாரணையை முடித்து கொள்ள சிபிஐ முடிவு?
ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை ஒதுக்கீட்டில் நடைபெற்ற ஊழல் தொடர்பாக முக்கியமான அரசியல் பிரமுகர்களுடன் தரகர் நீரா ராடியா தொலைபேசியில் பேசிய உரையாடல்களின் பதிவு நாடா வெளியானது.
இந்த உரையாடலை முழுமையாக ஆய்வு செய்து விசாரணை நடத்த சிபிஐக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இதன் அடிப்படையில், சிபிஐ வழக்குப் பதிவு செய்து, 14 முதல் கட்ட விசாரணைகளைத் தொடங்கியது.
இந்த வழக்கு தொடர்பாக ரிலையன்ஸ் நிறுவனம், யுனிடெக், டாடா மோட்டார்ஸ் ஆகிய நிறுனங்களின் அதிகாரிகளிடம் சிபிஐ அண்மையில் விசாரணை நடத்தியது.
இந்நிலையில் இந்த டேப் விசாரணையில் எந்த ஒரு குற்றச்செயலையும் கண்டுபிடிக்க முடியவில்லை என்ற முடிவுக்கு வந்துள்ளதாம் சிபிஐ. இதனால் இது தொடர்பான வழக்கு அடுத்த மாதம் உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரும்போது வழக்கை கைவிடும் முடிவை தெரிவிக்க சிபிஐ முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
உச்ச நீதிமன்றம் அளிக்கும் உத்தரவின் அடிப்படையில்தான், இந்த வழக்கை முடித்துக் கொள்வதா அல்லது விசாரணையை மேலும் தொடர்வதா என்ற இறுதி முடிவு எடுக்கப்படும் என்று சிபிஐ அதிகாரிகள் தெரிவித்தனர்.