ஏர்செல்-மேக்சிஸ் வழக்கு: கலாநிதி, தயாநிதி மாறன் மீது குற்றப்பத்திரிகை தாக்கல்!
டெல்லி: ஏர்செல் நிறுவனத்தின் பங்குகளை மலேசியாவின் மேக்சிஸ் நிறுவனம் வாங்கியது தொடர்பான விவகாரத்தில் முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதி மாறன் மற்றும் அவரது சகோதரர் கலாநிதிமாறன் மீது சிபிஐ நேற்று குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது.
2004-2007 ஆண்டுகாலத்தில் மத்திய தொலைத் தொடர்புத் துறை அமைச்சராக திமுகவைச் சேர்ந்த தயாநிதி மாறன் இருந்தார். அப்போது வெளிநாட்டு வாழ் இந்தியத் தொழிலதிபரான சிவசங்கரன், சென்னையில் நடத்தி வந்த ஏர்செல் தொலைத்தொடர்பு நிறுவனத்துக்கு ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை ஒதுக்கீடு கேட்டு 2006-ஆம் ஆண்டில் விண்ணப்பித்திருந்தார்.
ஆனால் அதற்கு தயாநிதி மாறன் உடனடியாக ஒப்புதல் அளிக்கவில்லை. இந்நிலையில் ஏர்செல் நிறுவனப் பங்குகள் திடீரென மலேசியாவின் மேக்சிஸ் நிறுவனத்துக்கு கைமாறின. அதன்பிறகு ஏர்செல் நிறுவனத்துக்கு 14 ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை உரிமங்கள் வழங்கப்பட்டன.

இதற்குப் பிரதிபலனாக மேக்சிஸ் நிறுவனம் தயாநிதி மாறனின் சகோதரர் கலாநிதி மாறன் நடத்தும் சன் டிவி குழுமத்தின் "சன் டைரக்ட்' நிறுவனத்தில் ரூ.650 கோடி முதலீடு செய்தது, இந்த பணம் மொரீசியஸ் உள்ளிட்ட வெளிநாடுகள் வழியே சன் டைரக்ட் நிறுவனத்துக்கு கொடுக்கப்பட்டதாகவும் கூறப்பட்டது. இது தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்தி வந்தது.
3 ஆண்டுகாலம் கிடப்பில்....
இந்த வழக்கில் கடந்த 2011ஆம் ஆண்டே சிபிஐ தனது முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்தது. ஆனாலும் இத்தனை ஆண்டுகாலம் இந்த வழக்கு கிடப்பிலேயே கிடந்தது. அதனால் இந்த வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படவில்லை.
உச்சநீதிமன்றம் காட்டம்
இதன் பின்னர் இந்தியாவில் இருக்கும் ஆதாரங்கள், மலேசிய விசாரணையின் போது கிடைத்த ஆதாரங்கள் ஆகியவற்றை வைத்தே வழக்கின் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யலாம் என்று உச்சநீதிமன்றம் கடிந்து கூறியது
குற்றப்பத்திரிகைக்கு கிரீன் சிக்னல்
இந்நிலையில் மத்தியில் ஆட்சி மாற்றம் ஏற்பட ஏர்செல்-மேக்சிஸ் வழக்கும் சூடு பிடித்தது. அட்டர்னி ஜெனரல் முகுல் ரோஹத்கியும் ஏர்செல்-மேக்சிஸ் விவகாரத்தில் மாறன் சகோதரர்கள் மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்வதற்கான போதிய ஆதாரம் உள்ளதாக கடந்த ஜூலை மாதம் சி.பி.ஐ.யிடம் தெரிவித்திருந்தார்.
உச்சநீதிமன்றத்தில் தயாநிதி வழக்கு
இதனிடையே மலேசியா விசாரணை முழுமை அடையாத நிலையில் சிபிஐ தாக்கல் செய்ய இருக்கும் குற்றப்பத்திரிகையில் தன் பெயர் இடம்பெறக் கூடாது என்று உச்சநீதிமன்றத்தில் தயாநிதி மாறன் ஒரு மனுவைத் தாக்கல் செய்தார். ஆனால் இம்மனுவை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள் எச்.எல்.தட்டூ, எஸ்.ஏ.பாப்டே, ஏ.எம்.சாப்ரே ஆகியோர் அடங்கிய பெஞ்ச், முதலில் சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யட்டும். அதன் பின்னர் அது முழுமையானதா? இல்லையா? என்பது குறித்து ஆராயலாம் என்று கூறினர். பின்னர் தயாநிதி மனுவை தள்ளுபடி செய்தனர்.
குற்றப்பத்திரிகை தாக்கல்
இதன் தொடர்ச்சியாக நேற்று சிபிஐ நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது. இதில் மொத்தம் 9 பேர் பெயர்கள் இடம்பெற்றுள்ளன.
குற்றப்பத்திரிகையில் யார்? யார்?
தயாநிதி மாறன், அவரது மூத்த சகோதரர் கலாநிதி மாறன், மலேசியத் தொழிலதிபர் டி.அனந்த கிருஷ்ணன், மேக்சிஸ் நிறுவனத்தின் உயரதிகாரியான அகஸ்டஸ் ரால்ப் மார்ஷல் மற்றும் முன்னாள் டெலிகாம் செயலாளர் ஜே.எஸ்.ஷர்மா ஆகியோரது பெயர்கள் இடம்பெற்றுள்ளன. இதில் ஷர்மா உயிரிழந்துவிட்டார்.
நிறுவனங்கள்
மேலும் சன் டைரக்ட் பிரைவேட் லிமிடெட், மேக்சிஸ் கம்யூனிகேஷன்ஸ் பெர்ஹாட், சௌத் ஏசியா என்டேர்டைன்மென்ட் ஹோல்டிங் லிமிடெட் மற்றும் ஆஸ்ட்ரோ ஆல் ஏசியா நெட்வொர்க் பிஎல்சி ஆகிய நிறுவனங்களும் குற்றப்பத்திரிகையில் சேர்க்கப்பட்டுள்ளன.
செப்டம்பர் 11ல் விசாரணை
இந்த குற்றப்பத்திரிகை தொடர்பான விசாரணை எதிர்வரும் செப்டம்பர் மாதம் 11ந் தேதி நடைபெறும் என்று சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஓ பி சைனி தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications