பாஜக பக்கம் போகும் ராம்விலாஸ் பஸ்வான்- சிபிஐயை ஏவும் காங்கிரஸ்!
டெல்லி: லோக் ஜனசக்தி தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான ராம்விலாஸ் பாஸ்வானிடம் சிபிஐ விசாரணை நடத்தக் கூடும் என தகவல்கள் வெளியாகி உள்ளன.
லோக் ஜனசக்தி கட்சியின் தலைவரான ராம்விலாஸ் பாஸ்வான் 2004-2009ஆம் ஆண்டு மத்திய அமைச்சராக இருந்தார். அந்த காலகட்டத்தில் பொகாரோ எஃகு ஆலையில் வேலைக்கு ஆட்சேர்ப்பதில் முறைகேடு நடைபெற்றதாக சி.பி.ஐ. வழக்கு பதிவு செய்தது.
இந்த வழக்கில் சி.பி.ஐ. நடத்திய சோதனையின் போது வேலை அளிக்க பரிந்துரை செய்து ராம்விலாஸ் பாஸ்வானின் விலாசம் கொடுத்த கடிதங்கள் கிடைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதனால் ராம்விலாஸ் பாஸ்வானிடம் விசாரணை நடத்த சிபிஐ முடிவு செய்துள்ளது.
லோக்சபா தேர்தலில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணியைவிட்டு விலகி பாரதிய ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் பாஸ்வான் இணையக் கூடும் என்று கடந்த சில நாட்களாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.
இந்த நிலையில் திடீரென ஏதோ ஒரு வழக்கை முன்வைத்து ராம்விலாஸ் பாஸ்வானிடம் சிபிஐ விசாரணை நடத்த முயற்சிப்பது, ஒரு மிரட்டல் போக்கு என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள். ஆனால் இந்த விசாரணையை எதிர்கொள்ள நாங்கள் தயார் என்று லோக் ஜனசக்தி கட்சி அறிவித்துள்ளது.