டெல்லி தலைமைச் செயலகத்தில் சிபிஐ அதிரடி ரெய்டு!
டெல்லி தலைமைச் செயலகத்தில் சிபிஐ அதிகாரிகள் இன்று திடீர் ரெய்டு நடத்தினர். சுகாதாரத்துறை அமைச்சரின் உதவியாளர் அலுவலகத்தில் நடைபெற்ற அதிரடி ரெய்டால் பரபரப்பு ஏற்பட்டது.
டெல்லி : டெல்லி தலைமைச் செயலகத்தில் சிபிஐ அதிகாரிகள் இன்று அதிரடி ரெய்டு நடத்தினர். சுகாதாரத்துறை அமைச்சர் சத்யேந்தர் ஜெயினின் சிறப்பு அதிகாரியின் அலுலவலகத்தில் நடைபெற்ற இந்த ரெய்டால் அங்கு பரபரப்பு நிலவியது.
டெல்லி மாநில சுகாதாரத்துறை அமைச்சரின் சிறப்பு அதிகாரியாக மருத்துவரான நிகுஞ்ச் அகர்வால் நியமிக்கப்பட்டார். அவர் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் உறவினர் என அம்மாநில பா.ஜ.க தலைவர் விஜேந்தர் குப்தா குற்றம் சாட்டினார்.
Delhi: CBI conducts searches at Delhi Health Minister Satyendra Jain's OSD's office pic.twitter.com/wO4iZCutFz
— ANI (@ANI_news) December 30, 2016
அவருக்கு முறைகேடாக பதவி வழங்கப்பட்டிருப்பதாகவும் விஜேந்தர் குப்தா புகார் கூறினார். மேலும் அங்குள்ள நேரு மருத்துவமனையில் அவருக்கு உயர் பதவி வழங்கப்பட்டிருப்பதாவும் அவர் குற்றம்சாட்டினார்.
எந்த நடைமுறையையும் பின்பற்றாமல் அகர்வால் அமைச்சரின் சிறப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டிருப்பதாகவும் மருத்துவமனையில் மூத்த அதிகாரியாகவும் நியமிக்கப்பட்டுள்ளதாக புகார்கள் எழுந்தன.
இந்த விவகாரத்தை அண்மையில் பதவி விலகிய டெல்லி துணை நிலை ஆளுநர் நஜீப் ஜங் கடந்த நவம்பர் மாதம் சிபிஐ அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளார். இதையடுத்து நிகுஞ்ச் அகர்வால் மீது சிபிஐ அதிகாரிகள் நேற்று வழக்குப்பதிவு செய்தனர்.
இந்நிலையில் தலைமைச் செயலகத்தில் உள்ள நிகுஞ்ச் அகர்வாலின் அலுவலகத்தில் அதிகாரிகள் இன்று திடீர் ஆய்வு நடத்தி வருகின்றனர். நிகுஞ்ச் அகர்வால் எந்த நேர்காணலும் இன்றி மருத்துவமனையின் மூத்த அதிகாரியாக நியமிக்கப்பட்டிருப்பதாகவும் இதுதொடர்பாக மருத்துவமனை நிர்வாகம் எந்த நேர்காணலோ அல்லது விளம்பரங்களோ கொடுக்கவில்லை.அப்படியிருக்கும் போது நிகுஞ்ச் அகர்வால் எப்படி திடீரென மூத்த அதிகாரியாக நியமிக்கப்பட முடியும் என அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.
இதனிடையே இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள டெல்லி மாநில செய்தி தொடர்பாளர் தாங்கள் எந்த தவறும் செய்யவில்லை. அதனால் எந்த விசாரணைக்கும் அச்சப்பட வேண்டிய அவசியமில்லை எனக் கூறியுள்ளார்.
தமிழக அரசின் தலைமை செயலகத்தில் அண்மையில் வருமான வரி சோதனை நடத்தி சர்ச்சையாகி இருந்தது. இந்த நிலையில் டெல்லி தலைமைசெயலகத்துக்குள் சிபிஐ ரெய்டு நடத்தியுள்ளதும் சர்ச்சையாக வெடிக்கிறது.












Click it and Unblock the Notifications