மாயாவதி மீதான சொத்து குவிப்பு வழக்கையும் கைவிடுகிறது சிபிஐ!
டெல்லி: பகுஜன் சமாஜ்கட்சித் தலைவர் மாயாவதி மீதான சொத்துக் குவிப்பு வழக்கை கைவிட சிபிஐ முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
மத்திய அரசில் பங்கேற்காவிட்டாலும் சமாஜ்வாடி கட்சியும் பகுஜன் சமாஜ் கட்சியும் இக்கட்டான நேரங்களில் மத்திய அரசைக் காப்பாற்றி வந்துள்ளன. இதற்கு பிரதிபலனாக அண்மையில் முலாயம்சிங் யாதவ் மீதான சொத்துக் குவிப்பு வழக்கில் ஆதாரம் இல்லை என்று கூறி வழக்கை கைவிட்டது சிபிஐ.
தற்போது பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி மீதான சொத்துக் குவிப்பு வழக்கையும் கைவிட சிபிஐ முடிவு செய்துள்ளது. கடந்த ஆண்டு சிபிஐ பதிவு செய்த மாயாவதிக்கு எதிரான எப்.ஐ.ஆரை ரத்து செய்தது உச்சநீதிமன்றம்.
அதனைத் தொடர்ந்து கடந்த ஆகஸ்ட் 8-ந் தேதி அன்று இந்த வழக்கை மீண்டும் விசாரிக்கக் கோரிய தனிநபர் ஒருவரின் மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதனால் வழக்கை கைவிட வேண்டிய நிலைக்கு சிபிஐ தள்ளப்பட்டுள்ளது.
இந்த வழக்கை கைவிடுவது தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் உரிய அறிவுறுத்தல் பெற்று இறுதி முடிவெடுக்கப்படும் என்று சிபிஐ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.