சட்ட விரோத மணல் குவாரிகள்: மாநில அரசுகளிடம் விளக்கம் கேட்கும் மத்திய அரசு
டெல்லி: மணல் குவாரிகளில் நடைபெறும் முறைகேடுகளை தடுக்கும் வகையில் மாநிலங்களில் செயல்படும் சட்டவிரோதமான மணல் குவாரிகள் எத்தனை? அவை மீது என்னென்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்ற தகவலை உடனடியாக அனுப்ப வேண்டும் என மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.
இது தொடர்பாக மத்திய சுரங்கத்துறை செயலர் அனுப் புஜாரி மாநில அரசுகளுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில், மணல் அள்ளுதல் தொடர்பாக மாநிலங்களில் சமீபத்தில் வரையறுக்கப்பட்ட கொள்கைகள், மாநில அரசுகளையும் பிரதிவாதியாக சேர்க்கப்பட்ட அதுதொடர்பான வழக்குகள் உள்ளிட்ட விவரங்களும் கேட்கப்பட்டுள்ளன.
அதன்படி, ஒவ்வொரு மாநில அரசும் கடந்த மூன்று ஆண்டுகளாக சட்டவிரோத மணல் குவாரிகளுக்கு எதிராக எடுக்கப்பட்ட நடவடிக்கை, அதுதொடர்பாக பதிவு செய்யப்பட்ட வழக்குகள், வசூலிக்கப்பட்ட அபராதத் தொகை ஆகியவற்றைத் தெரிவிக்குமாறு மாநில அரசுகளுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் அனுப் புஜாரி கோரியுள்ளார்.
தமிழகத்தில் மணல் குவாரிகள்
தமிழகத்தில், ஆற்றுப்படுகைகள் சென்னை, திருச்சி, மதுரை, பொள்ளாச்சி ஆகிய, நான்கு மண்டலங்களாக பிரித்து, பொதுப்பணித் துறை மூலம், மணல் எடுக்க அனுமதி அளிக்கப்படுகிறது.
தமிழகத்தில் தற்போதைய நிலவரப்படி மாவட்ட வாரியாக உரிய அனுமதியுடன் செயல்படும் குவாரிகள் குறித்த விவரம்:
திருச்சி 16 ,தஞ்சை 8 ,கரூர் 7,நாமக்கல் 5 ,அரியலூர் 4 ,நாகை 3 ,
திருவள்ளூர் 3,காஞ்சிபுரம் 2 ,வேலூர் 2 ,விருதுநகர் 1 ஆகிய இடங்களில் மணல் குவாரிகள் செயல்படுகின்றன.
முறைகேடு புகார்
இங்குள்ள அதிகாரிகளிடம், இரண்டு யூனிட் கொண்ட ஒரு லோடு மணலுக்கு, 626 ரூபாய் செலுத்தி ரசீது பெற்று, மணல் எடுத்துச் செல்லலாம் என்பது அரசு விதி. ஆனால், ஒவ்வொரு லாரி உரிமையாளரும், இப்படி ரசீது வாங்கி மணல் அள்ள முடியாது; மேலும் எடுத்து கொட்டுவதற்கு தேவையான இயந்திர மற்றும் பணியாளர் வசதி எல்லோரிடமும் இருக்காது என்பதால், குவாரிகளில் இருந்து மணலை எடுத்து, "யார்டு'க்கு கொண்டு வரும் பணியை மட்டும் செய்வதாக, தனியார் சிலர் உள்ளே நுழைந்தனர்.
கூடுதல் விலைக்கு விற்பனை
நாளடைவில், குவாரிகள் பொதுப்பணித் துறை கட்டுப்பாட்டில் இருந்தாலும், அதிலிருந்து மணல் எடுத்து, "யார்டு'க்கு கொண்டு வந்து, அங்கிருந்து மணல் லாரிகளுக்கு விற்பதில், தனியாரின் ஆதிக்கம் தலை விரித்தாட துவங்கியது. இதனால், குவாரிகளில் அனுமதிக்கப்பட்டதைவிட அதிகமாக மணல் எடுப்பதும், கூடுதல் விலைக்கு விற்பதும் என, முறைகேடுகள் தலைவிரித்தாடுகின்றன.பல இடங்களில், அரசு அனுமதித்த குவாரிகளுக்கு அருகிலேயே, மணல் அள்ளும் ஒப்பந்தம் பெற்றவர்கள், தங்கள் விருப்பம் போல் புதிய குவாரிகளை திறந்து, சட்ட விரோதமாக மணல் விற்பனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
வருவாய் துறை வசம்
மணல் குவாரிகள் அனைத்தும் பொதுப்பணித்துறை வசம் இருந்தாலும், இதில் நடக்கும் முறைகேடுகளை தடுக்க வேண்டிய பொறுப்பு வருவாய் துறை வசம் உள்ளது. இதனால், சட்ட விரோத குவாரிகளை பொதுப்பணித்துறையினர் கண்டுக்கொள்ளாமல் விடுவதும், மணல் திருட்டை தடுக்க செல்லும் வருவாய்த்துறை அதிகாரிகள் தாக்கப்படுவதும் தொடர்கதையாக உள்ளது.இந்நிலையில், கடந்த 2012ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம், உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை அடுத்து, ஐந்தாண்டுகளுக்கு மேல் செயல்பட்ட, 27 குவாரிகள் மூடப்பட்டன.
மணல் விலை, ராயல்டி தொகை
இந்த நிலையில் மணலின் விலை மற்றும் அதற்கான ராயல்டி தொகை விவரங்களையும் மாநில அரசுகள் தெரிவிக்க வேண்டும் என மாநில அரசுகளிடம் மத்திய அரசு கோரியுள்ளது.
நாடாளுமன்ற நிலைக்குழு கூட்டம்
சமீபத்தில் நடைபெற்ற சுரங்கம் மற்றும் நீர்வளத்துறைகளின் நாடாளுமன்ற நிலைக்குழுக் கூட்டத்தில் இந்தப் பிரச்சினை தொடர்பாக விரிவாக விவாதிக்கப்பட்டதையும் மத்திய அரசு சுட்டிக்காட்டியுள்ளது.
சட்டவிரோத மணல்
சட்டவிரோதமாக மணல் அள்ளுவதைத் தடுப்பதற்கான வழிமுறைகளை ஏற்படுத்த மாநில அரசுகளுக்கு உதவ வேண்டிய அவசியம் என்பதால், அதன் அடிப்படையில், மாநில அரசுகளுக்குக் கடிதம் அனுப்பப்பட்டுள்ளதாகவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
சுற்றுச்சூழல் தொடர்பானது
மணல் குவாரிகளைப் பொறுத்தவரை, மாநில அரசுகளின் கட்டுப்பாட்டில் உள்ளவையாக இருந்தாலும், சுற்றுச்சூழல் தொடர்பானது என்பதால் தலையிட வேண்டிய அவசியம் எழுந்துள்ளதாகவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
கனிம மணல், கிரானைட் குவாரிகள்
தமிழகத்தில் கனிமமணல், கிரானைட் முறைகேடுகளைப் பற்றி விசாரணை நடத்த ஐ.ஏ.எஸ் அதிகாரி சகாயம் தலைமையில் குழு நியமனம் செய்யப்பட்டுள்ளது.சகாயம்குழு விரைவில் விசாரணையை தொடங்க உள்ள நிலையில் சட்டவிரோத மணல் குவாரிகளைப் பற்றி அறிக்கை கேட்டுள்ளது மத்திய அரசு.