தேனியில் எழுந்த எதிர்ப்பால்… ஆந்திரா செல்கிறது நியூட்ரினோ திட்டம்
தேனி மாவட்டம் பொட்டிபுரத்தில் நியூட்ரினோ ஆய்வகம் அமைய மத்திய அரசு அனுமதியளித்து இருந்தது. அந்த அனுமதியை பசுமைத் தீர்ப்பாயம் ரத்துச் செய்தது. இந்த நிலையில் நியூட்ரினோ ஆய்வகம் ஆந்திராவுக்கு இடம்பெயருவதா
டெல்லி: தமிழகத்தின் தேனி மாவட்டத்தில் அமையவிருந்த நியூட்ரினோ ஆய்வகம், தற்போது ஆந்திர மாநிலத்துக்கு கொண்டு செல்லப்படவுள்ளது என்று இந்திய நியூட்ரினோ ஆய்வக இயக்குநர் விவேக் டாடர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக பேசிய இந்திய நியூட்ரினோ ஆய்வக இயக்குநர் விவேக் டாடர், " தேனி மாவட்டம் பொட்டிபுரத்தில் நியூட்ரினோ ஆய்வகம் அமைக்க திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் நியூட்ரினோ ஆய்வகத்திற்கு அளிக்கப்பட்ட அனுமதியை பசுமை தீர்ப்பாயம் ரத்து செய்து விட்டது.
நியூட்ரினோ ஆய்வகம் அமைக்க தமிழகத்தில் சுற்றுச்சூழல் அனுமதி பெறுவதில் தொடர்ந்து சிக்கல் நீடித்து வருவதால் ஆய்வகத்தை இடமாற்றம் செய்ய பரிசீலனை செய்யப்பட்டு வருகிறது " என்று கூறியுள்ளார்.
மேலும் அவர் கூறுகையில், " ஆந்திராவின் விசாகப்பட்டினம் மாவட்டம் கொத்தாபெல்லாம் என்ற இடத்தில் நியூட்ரினோ ஆய்வகத்தை அமைக்க பரிசீலிக்கப்பட்டு வருகிறது." என்றும் தெரிவித்தார்.
மத்திய அரசு மிகப்பெரிய அறிவியல் சார் திட்டமான நியூட்ரினோ ஆய்வகத்தை, தேனி மாவட்டம், பொட்டிபுரம் கிராமம் போடி மலைப் பகுதியில் அமைக்க திட்டமிட்டது. இதற்கான சுற்றுச்சூழல் அனுமதியை, மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம், கடந்த 2011ம் ஆண்டு வழங்கியது.
இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட உள்ள பகுதியைச் சுற்றி பல்வேறு முக்கிய நீர் ஆதாரங்கள் உள்ளன. தற்போது பொட்டிபுரத்தில் நியூட்ரினோ ஆய்வு மையம் அமைக்கப்பட உள்ளதாக கூறப்படும் இடத்தைச் சுற்றி 10-க்கும் மேற்பட்ட அணைகள் இருக்கின்றன.
இந்த நிலையில், ஆய்வகம் அமைப்பதற்காக சுமார் 2.5 கி.மீ. ஆழத்துக்கு பூமிக்குள் சுரங்கம் தோண்டும்போது ஏராளமான வெடிமருந்துகளை வெடிக்கச் செய்து பாறைகளைத் தகர்க்க வேண்டும்.
அது அணைகளுக்கும், மலைகளுக்கும், காடுகளுக்கும், வன வாழ் உயிரினங்களுக்கும் நிச்சயம் கடும் பாதிப்பை ஏற்படுத்தும். இத்திட்டத்திற்கு தடை விதிக்க கோரி பூவுலகின் நண்பர்கள் அமைப்பு, பசுமை தீர்ப்பாயத்தில் முறையிட்டது.
வழக்கு பல்வேறு கட்டங்களை தாண்டிய நிலையில் சமீபத்தில் நியூட்ரினோ ஆய்வகத்திற்கு அளிக்கப்பட்ட அனுமதியை பசுமை தீர்ப்பாயம் ரத்து செய்து உத்தரவிட்டது. இதனாலேயே நியூட்ரினோ ஆய்வு மையம் ஆந்திராவுக்கு இடம் பெயருகிறது.
ஆனால், தமிழகத்திலேயே திட்டத்தை செயல்படுத்த சுற்றுச்சூழல் அனுமதிக்கு மீண்டும் விண்ணப்பம் செய்திருப்பதாக அதிகாரி விவேக் தெரிவித்துள்ளார். இத்திட்டத்தை ஆந்திராவிற்கு மாற்றம் செய்யப்படவில்லை என்றும் அவர் திடீரென மறுத்துள்ளார்.