ஆபாசமற்ற இணையதளங்கள் மீதான தடை நீக்கம்: மத்திய அரசு முடிவு
டெல்லி: 857 ஆபாச இணையதளங்கள் முடக்கப்பட்டதை மறு ஆய்வு செய்து புதிய உத்தரவை மத்திய அரசு பிறப்பித்துள்ளது.
ஆபாச இணையதளங்களுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு ஒன்று நிலுவையில் உள்ளது. அதை விசாரித்த நீதிபதிகள், மனுதாரர் கொடுத்துள்ள ஆபாச இணையதளங்கள் பட்டியல் மீது நடவடிக்கை எடுக்குமாறு மத்திய அரசைக் கேட்டுக்கொண்டனர்.
இதை ஏற்று 857 இணையதளங்களை முடக்குமாறு இணையதள சேவை வழங்கும் நிறுவனங்களுக்கு மத்திய தொலைத்தொடர்பு அமைச்சகம் உத்தரவிட்டது. அதன்படி அவை முடக்கப்பட்டன.
ஆனால், இந்த நடவடிக்கை சமூக ஊடகங்களில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த நிலையில் மத்திய தொலைத்தொடர்புத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத், உயர்மட்ட ஆய்வுக் கூட்டத்தை நடத்தினார்.
857 இணையதளங்களை முடக்கிய மத்திய அரசின் உத்தரவு குறித்து இந்த கூட்டத்தில் மறுபரிசீலனை செய்யப்பட்டது. அத்துடன் ஆபாசமற்ற இணையதளங்கள் மீதான தடையை நீக்குவது என்று முடிவு செய்யப்பட்டது.
இத்தகைய இணையதளங்களை பொதுமக்கள் பார்வைக்கு அனுமதிக்குமாறு இணையதள சேவை நிறுவனங்களை உடனடியாக கேட்டுக்கொள்வது என தீர்மானிக்கப்பட்டது.
தற்போது விதிக்கப்பட்டுள்ள தடை தற்காலிகமானதுதான் என்றும் உச்சநீதிமன்ற உத்தரவுக்கு பிறகே இறுதி முடிவு இதில் எடுக்கப்படும் என்று மத்திய அரசு அதிகாரிகள் தெரிவித்தனர்.