ஜாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு விவரங்களை மத்திய அரசு உடனே வெளியிட வேண்டியது அவசியம்
டெல்லி: மத்திய அரசு தம் கைவசம் இருக்கும் ஜாதிவரி மக்கள் தொகை கணக்கெடுப்பு விவரங்களை பகிரங்கப்படுத்துவதன் மூலம் ஒட்டுமொத்தமாக இந்திய அளவில் கல்வி,வேலைவாய்ப்பு, அரசியல் உள்ளிட்ட அனைத்து நிலைகளிலும் அனைத்து சமூக மக்களும் தங்களுக்கான பிரதிநிதித்துவத்தைப் பெறக் கூடிய சம நீதி கிடைக்கும் என்பதே பெரும்பான்மை சமூகத்தின் குரல்.
சமூக, பொருளாதார, ஜாதிவாரியான முதல் கணக்கெடுப்பு இந்தியாவில் 1934-ஆம் ஆண்டில் நடைபெற்றது. அதன் பின்னர் ஏறக்குறைய 75 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த தேசத்தில் இது தொடர்பான புள்ளி விவரம் எதுவுமே எடுக்கப்படாமலே இருந்தது.
அந்த பழைய புள்ளி விவரங்களின் அடிப்படையில்தான் சமூகத்தின் பெரும்பான்மை மக்களுக்கு கல்வி மற்றும் இடஒதுக்கீட்டில் வேலை வாய்ப்பு என்பது வழங்கப்பட்டு வருகிறது. அதுவும் தமிழகத்தைப் பொறுத்தவரையில் 69% இட ஒதுக்கீடு என்பது 20 ஆண்டுகளுக்கு முன்னர் நடைமுறைக்கு வந்தது. ஆனால் இது இன்று வரை முழுமையாக நடைமுறைக்கு வராத வகையில் வழக்குகள் மேல் வழக்குகள், விசாரணைகள் தொடர்கிறது.
இதேபோல் மத்திய அரசு கல்வி மற்றும் இடஒதுக்கீட்டில் நாட்டின் பெரும்பான்மையினராக இருக்கும் இதர பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு வெறும் 27% மட்டுமே வழங்கப்படுகிறது. இந்த 27% இடஒதுக்கீடு என்பது ஏதோ திடுமென வந்துவிடவில்லை. மிகப் பெரிய சமூக, அரசியல் கலகங்களுக்கு மத்தியில்தான் மண்டல் கமிஷன் பரிந்துரைத்த 27% நடைமுறைக்கு வந்துள்ளது. ஆனாலும் கூட இந்த 27% இடஒதுக்கீடும் முழுமையாக நடைமுறைக்கு வரவில்லை.
இந்த நிலையில் 2011ஆம் ஆண்டு முதல் 2013 ஆம் ஆண்டு வரை மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. அதில் ஜாதிவிவரங்களும் கோரப்பட்டு சேர்க்கப்பட்டன. இதை திமுக, பாமக உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகள் தந்த நெருக்கடியால் தான் மத்திய காங்கிரஸ் அரசு சேர்த்தது. தற்போது இந்த மக்கள் தொகை கணக்கெடுப்பின் பல்வேறு அம்சங்கள் வெளியிடப்பட்டுள்ளன.
ஆனால் இந்திய சமூக அமைப்பில் மிகப் பெரிய தலைகீழ் மாற்றத்தை ஏற்படுத்த வகை செய்யும் இந்த ஜாதிவாரி மக்கள் தொகை விவரங்களை மட்டும் மத்திய பாஜக அரசு வெளியிடவில்லை. மாறாக இந்த விவரங்கள் நாடாளுமன்றத்தில்தான் வெளியிடப்படும் என்று பம்மிக் கொண்டிருக்கிறது மத்திய அரசு.
இடஒதுக்கீடு தொடர்பான வழக்குகள் எந்த நீதிமன்றத்திலும் நடந்தாலும் 'நீதிபதிகள்' பார்வையில்தான் தீர்ப்புகள் வழங்கப்படுகின்றனவே தவிர சமூக யதார்த்தங்களின் அடிப்படையில் இந்த மண்ணில் யார் பெரும்பான்மை? சிறுபான்மை என்கிற புள்ளி விவரங்கள் அடிப்படையில் எப்போதும் தீர்ப்பு வழங்கப்பட்டதே இல்லை..
இதனால் காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரையிலான பெரும்பான்மை சமூகத்து மக்களுக்கு கிடைக்க வேண்டிய கல்வி, வேலைவாய்ப்பு உரிமை என்பது வழக்கம் போல ஒரு பிரிவினரால் கபளீகரம் செய்வது தொடர் கதையாகி வருகிறது. இந்த பேரவலத்துக்கு எளிதாக முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் தற்போது கையில் ஜாதிவாரி புள்ளி விவரங்கள் இருக்கின்றன. ஆனால் வெளியிடுவதற்குதான் மத்திய அரசிடம் மனம் இல்லாமல் இருக்கிறது.
இதற்கான காரணங்கள் தெரிந்த விஷயங்கள் தான்..
தற்போதைய நிலையில் மத்திய அரசு தம் கைவசம் இருக்கும் ஜாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு விவரங்களை வெளியிட்டால் என்ன மாதிரியான எதிர்வினைகள் நிகழும்?
- நாடு முழுவதும் இருக்கும் பிற்படுத்தப்பட்ட சமூகங்கள் தங்களது மக்கள் தொகைக்கு ஏற்ப கல்வி, வேலைவாய்ப்பு மற்றும் 'அரசியலிலும்' இடஒதுக்கீட்டை மும்முரமாக வலியுறுத்தும்.
- இத்தனை ஆண்டுகாலமாக தாங்கள் அனுபவித்து வரும் சலுகைகள் பறிபோகிறது என்ற நிலைமை உருவாகும் போது 'முற்படுத்தப்பட்ட' சமூகம் கொந்தளித்து வீதிக்கு வந்து போராடும்...
- பெரும்பான்மை சமூகத்துக்கு வெறும் 27% இடஒதுக்கீடு அளித்த மண்டல் கமிஷனுக்கு எதிராக கோஷ்வாமிகள் தீக்குளித்து பிரளயத்தை ஏற்படுத்திய சம்பவங்கள் மீண்டும் நிகழலாம்..
- எங்கள் ஜாதியினர் இத்தனை கோடி பேர் என்று வீண் தம்பட்டம் அடிக்கும் குட்டி குட்டி ஜாதி வெறி கட்சிகள் சமூகத்தில் இருந்து அன்னியப்படுத்தப்படலாம்; அதே நேரத்தில் இது வரை ஜாதிகட்சி தொடங்காத சமூகங்கள், எங்கள் சமூகத்துக்கு இவ்வளவு பிரதிநிதித்துவம்' தேவை என களத்துக்கு வரலாம்..
- ஒட்டுமொத்தமாக நாட்டின் அரசு அமைப்பு முறையே ஜாதிய பிரதிநித்துவத்தின் அடிப்படையிலான கட்டமைப்பாக உருமாறிப் போவதற்கும் வாய்ப்பிருக்கிறது.
- இப்படி உருமாறிப் போவதன் மூலமாக இந்த தேசத்தின் அனைத்து சமூகத்தினரும் சம வாய்ப்புப் பெற முடியும் என்கிற சமூக நீதி வேரூன்றவும் பிரகாசமான வாய்ப்பு உண்டு.
- இந்தியாவின் முன்னேற்றத்துக்கு பெரும் தடையாக இருக்கும் 'ஜாதிய பாகுபாடு', ஜாதிய ஏற்றத் தாழ்வுக்கு சம்மட்டி அடி கொடுத்து சமநிலைச் சமூகமாக இந்திய சமூக அமைப்பு மாறுவதற்கும் வழிவகுக்கும்.
இதனால் மத்திய அரசு உடனடியாக ஜாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு விவரங்களை வெளியிட்டாக வேண்டியது அவசியம்.