தண்ணீருக்காக தமிழகம், கர்நாடகத்தில் ஏற்பட்டுள்ள வன்முறை வருத்தமளிக்கிறது: சந்திரபாபு நாயுடு
விஜயவாடா: காவிரி நதி நீர் தொடர்பாக கர்நாடகா, தமிழகத்தில் ஏற்பட்டுள்ள வன்முறை மிகவும் வருத்தமளிக்கிறது என ஆந்திரா முதல்வர் சந்திரபாபு தெரிவித்துள்ளார்.
காவிரி நதிநீர் தொடர்பாக கர்நாடகா, தமிழகத்தில் வன்முறையால் ஏற்பட்டுள்ளது. இது எனக்கு மிகவும் மனவருத்தத்தை அளித்துள்ளது. வன்முறை எந்த ஒரு பிரச்சினைக்கும் தீர்வாகாது. தண்ணீர் தட்டுப்பாடு எவ்வளவு பெரிய விளைவுகளை ஏற்படுத்தியுள்ளன என்பதற்கு இது ஒரு எடுத்துக்காட்டு.
விஜயவாடாவில் நிகழ்ச்சி ஒன்றில் அவர் பேசுகையில், "ஆந்திராவில் தண்ணீர் தட்டுப்பாட்டை போக்கவும், சேமிக்கவும் புதிய திட்டம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் மூலம் மாநிலத்தில் 1.31 மீட்டர் நிலத்தடி நீர் மட்டம் உயர்ந்துள்ளது. இது ஒரு கோடியே 19 லட்சம் கன அடி தண்ணீருக்கு சமம்.
இத்திட்டத்தின் மூலம் விவசாயத்திற்கான தண்ணீர் தேவையை மட்டும் பூர்த்தி செய்யாமல், தொழிற்சாலை மற்றும் இதர துறைகளுக்குமான தண்ணீர் தேவையை பூர்த்தி செய்வதே எங்கள் நோக்கம். இதில் பொறியியல் கல்லூரி மாணவர்களை இணைத்து அவர்களின் உதவியையும், ஆலோசனையையும் கோரியுள்ளது.
பண்டா சஞ்சீவானி திட்டத்தின் கீழ் இதுவரை 73, 970 குளங்கள் சீர்படுத்தப்பட்டுள்ளது, மேலும் 2,69,964 குளங்கள் ஆழப்படுத்தி சீர்படுத்தப்பட உள்ளது. இது நிலத்தடி நீர் மட்டம் மட்டுமின்றி தண்ணீர் தட்டுப்பட்டை போக்க வழிவகுக்கும், இதுபோன்ற திட்டங்களை மற்ற மாநிலங்களும் செயல்படுத்தும் பட்சத்தில், எதிர்காலத்தில் தண்ணீர் பிரச்சினை ஏற்படாமல் தவிர்க்கலாம்" என தெரிவித்துள்ளார்.