599 ரூபாய்க்கு ஐபோன் தருவதாக பணம் பறித்த ஆன்லைன் நிறுவனம்! உஷார் மக்களே, உஷார்!!
பெங்களூரு: ஐபோனை 599 ரூபாய்க்கு விற்பனை செய்வதாக ஏமாற்றி பணம் பறித்த ஆன்லைன் நிறுவனத்தின் நிர்வாகிகளை பெங்களூரு போலீசார் கைது செய்தனர்.
பெங்களூரு போலீஸ் கமிஷனர் எம்.என்.ரெட்டி உள்ளிட்ட உயர் அதிகாரிகளுக்கு பொதுமக்கள் டிவிட்டர் மூலமாக புகார் அளிக்கும் வசதி ஏற்படுத்தி தரப்பட்டுள்ளது. இந்த வசதி பல்வேறு குற்றச்செயல்களை முன்கூட்டியே கண்டுபிடிக்க உதவிகரமாக இருந்து வருகின்றன. அதுபோலத்தான் ஆன்லைன் மோசடி ஒன்று டிவிட்டர் மூலமாக வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

http://www.bigsop.com என்ற ஆன்லைன் ஷாப்பிங் நிறுவனம், பெங்களூரு சில்க்போர்டு அருகேயுள்ள அகரா பகுதியில் செயல்பட்டு வந்தது. இந்த நிறுவன வெப்சைட்டில், சமீபத்தில் வெளியான ஒரு அறிவிப்பு அனைவர் கண்களையும் கவர்ந்தது. அது என்னவென்றால், ஐபோன் இங்கு ரூ.599க்கு கிடைக்கும் என்பதுதான்.
இதைப்பார்த்ததும், நம்மவர்களுக்கு ஆசை பீறிட்டது. நடைமுறையில் இது சாத்தியமா என்றெல்லாம் யோசிக்கவில்லை. ரூ.599தானே என்று நினைத்து பணத்தை ஆன்லைன் மூலமாக செலுத்திவிட்டனர். ஆனால் நாட்கள் பல கடந்தும் ஆர்டர் செய்தவர்களுக்கு போன் வந்து சேரவில்லை. சிலருக்கு மட்டும் பழைய சீனா மாடல் போன்களை அந்த நிறுவனம் அனுப்பிவைத்துவிட்டு இதுதான் ஐபோன் என்று அந்த நிறுவனம் கூறியுள்ளது.

இதன்பிறகுதான் தாங்கள் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த வாடிக்கையாளர்களில் ஒருவர், டிவிட்டர் மூலமாக போலீஸ் கமிஷனரின் கவனத்திற்கு இத்தகவலை கொண்டு சென்றுள்ளார். கமிஷனர் உத்தரவின்பேரில் நகர குற்றப்பிரிவு போலீசார் அதிரடி ரெய்டு நடத்தி ஆன்லைன் ஷாப்பிங் நிறுவனத்தின் நிர்வாகிகள் 6பேரை கைது செய்துள்ளனர். வெப்சைட்டை மூடும் நடவடிக்கை தொடங்கியுள்ளது.

'கேக்கிறவன் கேனப்பயலா இருந்தா, கேப்பையிலும் நெய் வடியும்' என்பது கிராமத்து பழமொழி. ஆனால் மெத்த படித்த ஆன்லைன் ஷாப்பிங் வாடிக்கையாளர்களையும் 599க்கு ஐபோன் தருவதாக ஏமாற்றிய நிறுவனத்தின் சாமர்த்தியத்தை பாருங்களேன். எனவே, ஆன்லைனில் பொருட்களை வாங்கும்போது உஷாராக இருங்க மக்களே.












Click it and Unblock the Notifications