சென்னை ரயிலில் வெடித்த குண்டு பெங்களூர் ரயில் நிலையத்தில் உருவாக்கப்பட்டது... பரபரப்பு தகவல்
பெங்களூர்: நமது நாட்டின் ரயில்வே நிலையங்கள் எந்த அளவுக்குப் பாதுகாப்பானதாக உள்ளது என்பது மிகப் பெரிய கேள்விக்குறியாகியுள்ளது. சென்னை ரயிலில் நடந்த வெடிகுண்டு வெடிப்பு தொடர்பாக கைதான ஜாகிர் மற்றும் மெஹபூப் அளித்த வாக்குமூலம்தான் இந்தக் கேள்வியை எழுப்பியுள்ளது.
கடந்த 2014ம் ஆண்டு மே 1ம் தேதி காஸிரங்கா எக்ஸ்பிரஸ் ரயில் பெங்களூர் ரயில் நிலையத்திலிருந்து சென்னைக்கு வந்தபோது அந்த குண்டு சென்டிரல் ரயில் நிலையத்தில் வைத்து வெடித்தது. அதில் ஸ்வாதி என்ற பெண் உயிரிழந்தார்.
காஸிரங்கா எக்ஸ்பிரஸ் ரயிலில் வெடித்த குண்டு, உண்மையில் பெங்களூர் ரயில் நிலையத்தில் வைத்து உருவாக்கப்பட்டதாக, இந்த வழக்குத் தொடர்பாக கைதான ஜாகிர் மற்றும் மெஹபூப் இருவரும் வாக்குமூலம் அளித்துள்ளனர்.
அதுவும் பெங்களூர் ரயில் நிலைய டாய்லெட்டில் வைத்து இந்த வெடிகுண்டை அவர்கள் சேர்த்துள்ளதாக கூறியுள்ளனர். அதன் பின்னர் அந்த குண்டை ரயிலில் வைத்துள்ளனர் இவர்கள்.
துணி வியாபாரிகள் போல்...
இந்த இருவரும் முன்னதாக கர்நாடக மாநிலம் தார்வாடில் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்துத் தங்கியுள்ளனர். துணி வியாபாரிகள் போல இவர்கள் தங்கியிருந்துள்ளனர். தங்களது பெயர்களை அரவிந்த், ஆனந்த் ஜோஷி என்று கொடுத்துள்ளனர். உத்திரப்பிரதேசத்தில் இருந்து வருவதாகவும் கூறியுள்ளனர்.
வெடிகுண்டு தயாரிப்பு...
கடந்த 2014ம் ஆண்டு ஏப்ரல் 31ம் தேதி இருவரும் பெங்களூரு வந்துள்ளனர். பெரிய பையுடன் அவர்கள் வந்துள்ளனர். அதில் பைப், தீப்பெட்டிகள், பட்டாசுப் பவுடர், சர்க்கரை, ஐஇடி, பேட்டரிகள், டைமர் ஆகியவை இருந்துள்ளன. பெங்களூர் ரயில் நிலையம் வந்ததும் டாய்லெட்டுக்குப் போய் அங்கு வைத்து வெடிகுண்டு செட் செய்துள்ளனர். வெடி மருந்தை பைப்பில் திணித்து, அதனுடன் டைமரையும், பேட்டரிகளையம் இணைத்து தயாரித்துள்ளனர்.
அடக்குமுறைக்கு எதிர்ப்பு...
காஸிரங்கா ரயிலில் அதிகாலை 3.30 மணிக்கு இந்த வெடிகுண்டை அவர்கள் பொருத்தினர். பின்னர் அங்கிருந்து வெளியேறி தார்வாட் கிளம்பிப் போய் விட்டனர்.
தார்வாட் வீட்டில் வைத்துத்தான் தாக்குதல் திட்டத்தை இவர்கள் தீட்டியுள்ளனர். அஸ்ஸாமில் முஸ்லீம்களுக்கு எதிரான அடக்குமுறைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் இந்த வெடிகுண்டை அவர்கள் வைத்துள்ளனர். காஸிரங்கா ரயிலை இவர்கள் தேர்வு செய்ய காரணம் பெங்களூரிலிருந்து இது அஸ்ஸாம் செல்வதால்.
கேள்விக்குறியான பாதுகாப்பு...
தாக்குதலுக்கு முன்பாக ஸாகிர் மட்டும் காஸிலரங்கா ரயிலில் சென்னைக்குப் பயணம் செய்து முன்நோட்டம் பார்த்துள்ளார். சென்னையிலிருந்து பஸ் மூலமாக அவர் தார்வாட் திரும்பியுள்ளார்.
இந்த வாக்குமூலத்தின் மூலம் நமது நாட்டின் ரயில்வே நிலையங்கள் எந்த அளவுக்குப் பாதுகாப்பானதாக உள்ளது என்பது மிகப் பெரிய கேள்விக்குறியாகியுள்ளது.
சுவாதி மரணம்...
கடந்த வாரம் சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் இன்போசிஸ் பெண் ஊழியர் சுவாதி, மற்ற பயணிகள் முன்னிலையில் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டார். அங்கு சிசிடிவி கேமராவோ, பாதுகாப்பு பணியில் போலீசாரோ இல்லாத காரணத்தால் குற்றவாளியைப் பிடிக்க போலீசார் திணறி வருவது குறிப்பிடத்தக்கது.