சத்தீஸ்கரில் ஏழைகளுக்கு மாதந்தோறும் 35 கிலோ இலவச அரிசி - காங்கிரஸ் தேர்தல் வாக்குறுதி
ராய்ப்பூர்: சத்தீஸ்கர் மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சி அமைத்தால் ஏழைகளுக்கு மாதந்தோறும் 35 கிலோ இலவச அரிசி வழங்கப்படும் என்று அக்கட்சி அறிவித்துள்ளது.
ராஜஸ்தான், மத்திய பிரதேசம் உள்ளிட்ட 5 மாநிலங்களின் சட்டசபை தேர்தல்களம் சூடுபிடித்து வருகிறது. காங்கிரஸ் - பாரதிய ஜனதா கட்சிகள் மக்களிடம் வாக்குகளைப் பெற வாக்குறுதிகளை அளித்து வருகின்றன.
பாரதிய ஜனதா ஆட்சி நடைபெறும் சத்தீஸ்கர் மாநிலத்தில் முக்கிய எதிர்கட்சியான காங்கிரஸ் தேர்தல் அறிக்கையை நேற்று வெளியிட்டது. அதில் இலவச அரிசி, விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் உள்பட பல்வேறு வாக்குறுதிகள் அளிக்கப்பட்டுள்ளன.
சத்தீஸ்கர் மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் வருமான வரி கட்டாத ஏழை, எளியவர்களுக்கு மாதம் தோறும் 35 கிலோ அரிசி இலவசமாக வழங்கப்படும். 5 குதிரை சக்தி வரை உள்ள விவசாய பம்புசெட்டுகளுக்கு இலவச மின்சாரம் வழங்கப்படும் என்று காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் விவசாயிகளிடம் இருந்து ஒரு குவிண்டால் நெல் 2 ஆயிரம் ரூபாய்க்கு கொள்முதல் செய்யப்படும். இதில் 500 ரூபாய் அந்த விவசாய குடும்பத்தை சேர்ந்த பெண்கள் பெயரில் வழங்கப்படும் என்றும் அத்தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications