சத்தீஸ்கரில் பெட்ரோல், டீசல் விலை குறைப்பு.. வாகன ஓட்டிகள் மகிழ்ச்சி.. ஆனா அரசுக்கு 1000 கோடி இழப்பு
ராய்ப்பூர் : பெட்ரோல் மற்றும் டீசல் மீதான வாட் எனப்படும் மதிப்புக் கூட்டப்பட்ட வரியை சத்தீஸ்கர் மாநில அரசு குறைத்துள்ளது.
பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை மத்திய அரசு குறைத்தது மட்டுமின்றி மாநில அரசுகளும் வாட் வரியை குறைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தது.
இதை அடுத்து காங்கிரஸ் ஆளும் மாநிலங்கள் உள்பட 25 மாநிலங்கள் பெட்ரோல், டீசல் மீதான மதிப்பு கூட்டு வரியை குறைத்துள்ளன.

மத்திய அரசு உத்தரவு
2021ம் ஆண்டு நவம்பர் 4ம் தேதி பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை 5 ரூபாய் முதல் 10 ரூபாய் வரை குறைத்து மத்திய அரசு உத்தரவு பிறப்பித்தது. இதை அடுத்து இந்தியா முழுவதும் பெட்ரோல் விலை லிட்டருக்கு 5 ரூபாயும், டீசல் விலை லிட்டருக்கு 10 ரூபாயும் குறைக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது.

வாகன ஓட்டிகள் அதிர்ச்சி
பெட்ரோல், டீசல் விலை ஒரு மாதமாக தொடர்ந்து கொண்டே வந்த நிலையில் சில மாநிலங்களில் பெட்ரோல் விலை 100 ரூபாயைத் தாண்டியதால் வாகன ஓட்டிகள் அதிர்ச்சி அடைந்தனர். பெட்ரோல் மீதான விலை உயர்வை காரணம் காட்டி உணவுப் பொருட்கள், கட்டுமானப் பொருட்கள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் விலை ஏற்றப்பட்டது. இதனால் மத்திய அரசுக்கு எதிர்க்கட்சிகள் அழுத்தம் தர ஆரம்பித்தன.

VAT குறைக்க வேண்டுகோள்
இதை அடுத்து கலால் வரியை குறைத்த மத்திய அரசு மாநில அரசுகளும் பெட்ரோல், டீசல் மீதான மதிப்பு கூட்டப்பட்ட வரியை குறைக்க வேண்டும் என வலியுறுத்தி இருந்தது. இந்த அறிவிப்பை அடுத்து காங்கிரஸ் மற்றும் பாஜக ஆளும் மாநிலங்களில் பெரும்பாலும் விலை குறைக்கப்பட்டது. ஆனால் தமிழ்நாட்டில் பெட்ரோல், டீசல் மீதான விலை குறைக்கப்படாததால் பாஜக போராட்டம் நடத்தி வருகிறது.

விலையை குறைத்த சத்தீஸ்கர்
மத்திய அரசின் அறிவுறுத்தலின் பேரில் தற்போது சத்தீஸ்கர் மாநில அரசும் பெட்ரோல் மற்றும் டீசல் மீதான வாட் (VAT - Value Added Tax) குறைத்துள்ளது. இதனால் அம்மாநில வாகன ஓட்டிகள், வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். முதலமைச்சர் பூபேஷ் பாகல் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சிதான் சத்தீஸ்கர் மாநிலத்தில் நடைபெற்று வருகிறது.

சத்தீஸ்கர் அமைச்சரவை முடிவு
இதற்கிடையே சத்தீஸ்கர் மாநில அமைச்சரவைக் கூட்டத்தில் டீசல் மீதான வாட் வரி 2 சதவீதம், பெட்ரோல் மீதான வாட் வரி 1 சதவீதம் குறைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த விலை குறைப்பால் மாநில அரசு சுமார் 1,000 கோடி ரூபாய் வரை வரி இழப்பு ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications