8 வயது சிறுமியை பலாத்காரம் செய்ய முயற்சி- ரூ50 ஆயிரம் வழங்க கோர்ட் உத்தரவு!
டெல்லி: டெல்லியில் 8 வயது சிறுமி மீதான பாலியல் வன்முறை வழக்கில் ரூ 50 ஆயிரம் நஷ்ட ஈடு வழங்க மாநில அரசுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
டெல்லியில் அண்மையில் காலணி தயாரிப்பு நிறுவனத்தின் ஊழியரான நரேஷ், காய்கறி வாங்க சென்ற 8 வயது சிறுமியிடம் ஆபாச படங்களைக் காட்டி தகாத முறையில் நடக்க முயற்சித்துள்ளார். ஆனால் அந்த காமுகனிடம் இருந்து சிறுமி தப்பி வீட்டுக்கு ஓடியிருக்கிறாள்.
இருப்பினும் அந்த சிறுமியை விடாது துரத்தியிருக்கிறான் அவன். இதுபற்றி சிறுமியின் பெற்றோர் போலீசாருக்கு தகவல் கொடுத்த உடன் அவன் தப்பி ஓடிவிட்டான். அந்த காமுகனை தேடிப் பிடித்து போலீசார் கைது செய்தனர்.
இது தொடர்பான வழக்கு டெல்லி நீதிமன்றத்தில் நீதிபதி இலா ராவத் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது, குழந்தைகளின் நலமும், அவர்களின் வாழ்க்கையும் பாதுகாக்கப் படவேண்டியது ஒவ்வொரு ஜனநாயக நாட்டின் முக்கிய கடமை ஆகும்.
அதன் மூலம் மட்டுமே எதிர்கால சந்ததியினரின் வாழ்க்கை முறை பாதுக்காக்கபடும். முழு சமூகத்தின் வளர்ச்சியும் அதில்தான் அடங்கி உள்ளது. குழந்தைகள் நாட்டின் பொதுச்சொத்துகள் என்று கூறியதுடன் அந்த சிறுமியின் குடும்பத்துக்கு ரூ50 ஆயிரம் நட்ட ஈடு வழங்கவும் மாநில அரசுக்கு நீதிபதி உத்தரவிட்டார்.