மோடியின் வெளிநாட்டு விமான பயண செலவு.. ஆர்டிஐ கேள்விகளுக்கு பதிலளிக்க ஏர் இந்தியாவுக்கு உத்தரவு
மோடியின் வெளிநாட்டு விமான பயண செலவு குறித்த ஆர்டிஐ கேள்விகளுக்கு பதிலளிக்க ஏர் இந்தியாவுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
டெல்லி : பிரதமரின் வெளிநாட்டு பயணம் குறித்து தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் கேட்கப்பட்ட கேள்விகளுக்குப் பதிலளிக்குமாறு ஏர் இந்தியா நிறுவனத்திற்கு மத்திய தகவல் ஆணைய கமிஷனர் உத்தரவிட்டுள்ளார்.
இந்தியப் பிரதமர் மோடி அடிக்கடி வெளிநாட்டுச் சுற்றுப்பயணம் மேற்கொள்வது தொடர்பாக எதிர்க்கட்சிகள் மற்றும் சமூக வலைத்தளங்களில் விமர்சனம் முன்வைக்கப்பட்டு வருகிறது.
இதுதொடர்பாக, லோகேஷ் பத்ரா என்பவர் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் 2016-17ம் ஆண்டு காலகட்டத்தில் பிரதமர் மோடி மேற்கொண்ட வெளிநாட்டு பயணங்கள் குறித்து ஏர் இந்தியா நிறுவனத்திடம் கேட்டு இருந்தார்.
அதில் பிரதமர் வெளிநாட்டு பயணம் மேற்கொண்ட தேதிகள், தங்கியிருந்த இடங்கள், மோடி மற்றும் அவரது அதிகாரிகளின் விமான பயணத்திற்காகப் பெறப்பட்ட விமான கட்டணங்கள் குறித்தும் கேள்வி எழுப்பி இருந்தார்.
இதுகுறித்து, பதில் தெரிவித்த ஏர் இந்தியா நிறுவனம், பிரதமரின் பயணத்தகவல்களை வெளியிடக்கூடாது என்று பிரதமர் அலுவலகம் அறிவுறுத்தி இருப்பதால், அந்த தகவல்களைத் தர மறுத்தது.
இதனைத் தொடர்ந்து லோகேஷ் பத்ரா மத்திய தகவல் ஆணையத்தியிடம் மேல்முறையீடு செய்தார். இதுகுறித்து மத்திய தகவல் ஆணைய கமிஷனர் அமித்வா பட்டாச்சார்யா புதிய உத்தரவை வெளியிட்டார்.
அந்த உத்தரவில், அரசு கருவூலத்தில் இருந்துதான் பிரதமரின் வெளிநாட்டுப் பயணங்களுக்காக விமானக் கட்டணங்கள் பெறப்பட்டுள்ளன. எனவே, அதில் எந்த ரகசியமும் காக்கக்கூடாது. அந்தத் தகவல்களை ஏர் இந்தியா வெளியிட வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார்.