நீதித்துறை மீதான மக்களின் நம்பிக்கையை அசைத்து பார்க்காதீர்கள்: இந்திய தலைமை நீதிபதி லோதா
டெல்லி: சமூகத்திலுள்ள அனைவரும் சரியானவர்கள் கிடையாது, நாங்களும் அந்த சமூகத்தில் இருந்துதான் வந்துள்ளோம் என்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ஆர்.எம்.லோதா தெரிவித்தார்.
நீதிபதிகளை தேர்வு செய்யும் குழு (கொலீஜியம்) அமைப்பை கலைக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட பொது நல மனு மீதான விசாரணை தலைமை நீதிபதி லோதா முன்னிலையில் வந்தது.
எங்கள் தேர்வே கேள்விக்குறியாகும்
இன்றைய வழக்கு விசாரணையின்போது லோதா கூறுகையில் "நீதிபதிகள் தேர்வு குழு மூலமாக தேர்வு செய்யப்பட்ட முதல் பேட்ஜ் நீதிபதிகளில் நானும் ஒருவர். நாரிமனும் சமீபத்தில் இதுபோலத்தான் தேர்வு செய்யப்பட்டார். எனவே இந்த நடைமுறை தவறு என்று தீர்ப்பளித்தால், எங்களது தேர்வும் தவறு என்பதைப்போலத்தான் ஆகும்.
குறைபாடுள்ள சமூகம்
இந்த சமூகத்தில் யார் ஒருவரையும் குறைபாடற்ற மனிதர் என்று கூறிவிட முடியாது. அந்த குறைபாடு உள்ள சமூகத்தில் இருந்துதான் நாங்களும் (நீதிபதிகள்) வந்துள்ளோம்.
பொது நல மனு தள்ளுபடி
தயவு செய்து நீதித்துறை மீதான மக்களின் நம்பிக்கையை அசைத்து பார்க்காதீர்கள்". இவ்வாறு லோதா தெரிவித்தார். இதன்பிறகு, இதுதொடர்பான பொது நல மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
கட்ஜு சர்ச்சை விமர்சனம்
நீதித்துறையில் ஊழல் நடைபெற்றுள்ளதாக, முன்னாள் நீதிபதி மார்கண்டேய கட்ஜு குற்றம் சாட்டி வருகிறார். மேலும், தற்போதுள்ள நீதிபதிகள் தேர்வு முறையை மாற்றியமைக்கும் வகையில் சட்ட திருத்தம் கொண்டுவர மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
லோதா அதிரடி
இதுபோன்ற நெருக்கடியான சூழ்நிலையில், நீதித்துறை மாண்பை காக்க வேண்டும், நீதிபதிகள் தேர்வு முறை சரியானதுதான் என்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி கூறியுள்ளது மிகுந்த முக்கியத்துவம் பெறுகிறது.