டெல்லியில் தமிழக விவசாயிகளை நாளை சந்திக்கிறார் எடப்பாடி பழனிச்சாமி!
டெல்லியில் போராடி வரும் தமிழக விவசாயிகளை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி நாளை சந்தித்து பேச உள்ளார்.
டெல்லி: பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லி ஜந்தர் மந்தரில் 40 நாட்களாக போராடி வரும் விவசாயிகளை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி நாளை நேரில் சந்தித்து பேசுகிறார்.
வறட்சி நிவாரணம், பயிர் கடன் தள்ளுபடி, காவிரி மேலாண்மை வாரியம் அமைத்தல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக விவசாயிகள் கடந்த மாதம் 14-ஆம் தேதி முதல் டெல்லி ஜந்தர் மந்தரில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். எலிக் கறி, பாம்புக் கறி சாப்பிடுதல், பாடை கட்டி ஊர்வலம், ஒப்பாரி போராட்டம், முழுநிர்வாணப் போராட்டம், பெண் வேடமணிந்து போராட்டம், கை, கால்களை கட்டிக் கொண்டு டெல்லி சாலையில் உருண்டு புரளும் போராட்டம் என்று ஏகப்பட்ட போராட்டங்களை விவசாயிகள் நடத்தினர்.
40-ஆவது நாளான இன்று அவர்கள் சிறுநீர் குடிக்கும் போராட்டத்தை நடத்தினர். எனினும் மத்திய அரசு அவர்களை கண்டுக்கொள்ளவே இல்லை.
மேலும் தமிழக முதல்வரும் தங்களை சந்திக்க வில்லை என்று விவசாயிகள் ஆதங்கத்தில் உள்ளனர். இந்நிலையில் டெல்லியில் நாளை அனைத்து கட்சி முதல்வர்களும் கலந்து கொள்ளும் நிதி ஆயோக் கூட்டத்தில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கலந்து கொள்கிறார்.
இந்தக் கூட்டம் நாளை காலை 9.30 மணிக்கு நடைபெறுகிறது. அதற்கு முன்னதாக விவசாயிகளை சந்தித்து பேச முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி திட்டமிட்டுள்ளார். முதல்வரின் சந்திப்பைத் தொடர்ந்து விவசாயிகள் போராட்டம் முடிவுக்கு வரக்கூடும் என கூறப்படுகிறது.