கோவா இடைதேர்தல்.. முதல்வர் மனோகர் பாரிக்கர் 4000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி!
கோவா மாநிலம் பனாஜி தொகுதிக்கு நடந்த இடைத் தேர்தலில் அம்மாநில முதல்வர் மனோகர் பாரிக்கர் 4000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.
பனாஜி: கோவா மாநிலம் பனாஜி தொகுதிக்கு நடந்த இடைத் தேர்தலில் அம்மாநில முதல்வர் மனோகர் பாரிக்கர் 4000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.
கோவாவில் நடைபெற்ற சட்டசபைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி அதிக இடங்களில் வெற்றி பெற்றிருந்தாலும், விடாது போராடி கூட்டணி கட்சிகளுடன் பா.ஜ.க. ஆட்சி அமைத்தது. மத்திய பாதுகாப்பு அமைச்சராக இருந்த மனோகர் பாரிக்கர், கோவா மாநிலத்தின் முதல்வரானார்.
சட்டசபை உறுப்பினராக அவர் 6 மாத கால அவகாசத்துக்குள், தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்பதால் பனாஜி தொகுதியின் பா.ஜ.க. எம்.எல்.ஏ. , முதல்வருக்காக தனது பதவியை ராஜினாமா செய்தார்.
இதையடுத்து அந்த தொகுதிக்கும், வால்பொய் தொகுதிக்கும் 23ம் தேதி இடைத்தேர்தல் நடந்தது. பாஜக வெற்றிவாய்ப்பு அதிகம் உள்ள தொகுதிகள் இவை என்பதால் முதல்வர் மனோகர் பாரிக்கர் வேட்பாளராக பனாஜியில் நிறுத்தப்பட்டார்.
தேர்தல் முடிந்து இன்று காலை வாக்குகள் எண்ணப்பட்டன. அதில், பனாஜி தொகுதியில் முதல்வர் மனோகர் பாரிக்கர் 4000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். வால்பொய் நகரிலும் பாஜகவே வெற்றி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.