ஏர் இந்தியா விமானத்தில் வழங்கிய உணவில் செத்த கரப்பான்பூச்சி!
ஏர் இந்தியா விமானத்தில் பயணிகளுக்கு வழங்கப்பட்ட உணவில் செத்த கரப்பான்பூச்சி கிடந்தது பயணிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
டெல்லி: ஹைதராபாத்திலிருந்து டெல்லி வழியாக சிகாகோ சென்ற ஏர் இந்தியா விமானத்தில் வழங்கப்பட்ட உணவில் செத்த கரப்பான் பூச்சி கிடந்தது பயணிகளிடையே அருவருப்பை ஏற்படுத்தியது.
ஹைதராபாத்திலிருந்து டெல்லி வழியாக ஏர்இந்தியா விமானம் சிகாகோ சென்றது. அப்போது அதில் பயணித்த ரகுல் ரகுவான்ஷி என்ற பயணிக்கு வழங்கப்பட்ட உணவில் செத்த கரப்பான் பூச்சி கிடந்தது. இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த அவர் ஏர் இந்தியா நிறுவன மேலாளரிடம் இதுகுறித்து நியாயம் கேட்டார். அதற்கு மன்னிப்பு கோரிய ஏர் இந்தியா நிறுவனம் இதுதொடர்பாக உரிய விசாரணை நடத்தப்படும் எனக்கூறி சமையல் ஒப்பந்த நிறுவனத்திடம் விளக்கம் கேட்டு நோட்டிஸ் அனுப்பியுள்ளது.
இந்நிலையில் உணவில் செத்த கரப்பான் பூச்சி கிடந்த புகைப்படத்தை டுவீட்டரில் வெளியிட்டுள்ள ரகுல் ரகுவான்ஷி, ஏர் இந்தியா தற்போது தனது பயணிகளுக்கு வழங்கும் சைவ உணவில் கரப்பான்பூச்சியையும் சேர்த்து பரிமாறுவதாக குறிப்பிட்டுள்ளார்.
இதற்கு மன்னிப்பு கோரி டுவீட்டியுள்ள ஏர் இந்தியா உணவில் கரப்பான் பூச்சி கிடந்ததை சகித்துக் கொள்ள முடியாது என்றும் இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளது.