தீவிரவாதிகளுக்கு எதிரான தாக்குதலில் இந்தியாவுக்கு முழு ஆதரவு.. அமெரிக்கா அறிவிப்பு
ஸ்ரீநகர்: காஷ்மீர் மாநிலம் யூரி தாக்குதலுக்கு பதிலடியாக இந்தியா புதன்கிழமை இரவு 12.30 மணி முதல் அதிகாலை 4.30 மணிவரை ஆக்கிரமிப்பு பாகிஸ்தான் எல்லைக்குள் புகுந்து சர்ஜிக்கல் ஸ்டிரைக் எனப்படும், தீவிரவாத இலக்குகளை குறிவைத்து நடத்தும் தாக்குதலை வெற்றிகரமாக முடித்து சுமார் 40 தீவிரவாதிகளை கொன்று குவித்தது.
இதனிடையே, எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை ஒழிக்க இந்தியா எடுத்து வரும் நடவடிக்கைகளுக்கு முழு ஆதரவு அளிப்பதாக அமெரிக்கா உறுதி அளித்துள்ளது.
இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலுடன், அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சூசன் ரைஸ் நேற்று தொடர்பு கொண்டு பேசினார்.
அப்போது யூரி தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்த அவர், இந்த தாக்குதலில் பலியான குடும்பங்களுக்கு அமெரிக்க அரசு சார்பில் இரங்கலை தெரிவித்தார். பயங்கரவாதிகளை ஒடுக்கும் விஷயத்தில் இந்தியா மேற்கொள்ளும் ஒவ்வொரு நடவடிக்கைக்கும் அமெரிக்கா முழு ஆதரவு அளிக்கும் என்றும் அவர் உறுதிபடக்கூறினார்.
இதன்பிறகே, பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இந்தியா தாக்குதல் நடத்திய தகவலை இந்தியா வெளியிட்டது. இதனிடையே அமெரிக்க மீடியா செயலாளர் ஜான் எர்னெஸ்ட் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் சூசன் நடத்திய ஆலோசனையை சுட்டிக் காட்டியுள்ளதோடு, தீவிரவாதத்தை ஒழிக்க இந்தியாவுடன் அமெரிக்கா இணைந்து செயல்படும் என திட்டவட்டமாக கூறியுள்ளார்.