குஜராத்தில் பொது சிவில் சட்டம்: 'தேர்தல் வந்தாலே இப்படித்தான்' பாஜகவை தாக்கிய அசாதுதின் ஓவைசி
அகமதாபாத்: குஜராத்தில் பொது சிவில் சட்டத்தை அமல்படுத்த பாஜக அரசு தீவிரம் காட்டி வரும் நிலையில், இது சமத்துவத்துக்கு எதிரானது என ஏஐஎம்ஐஎம் கட்சி தலைவர் அசாதுதின் ஓவைசி தெரிவித்துள்ளார்.
பாஜகவின் கோட்டையாக விளங்கும் குஜராத்தில் விரைவில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது.
இதனால் இந்த தேர்தலில் எப்படியாவது பாஜகவை வீழ்த்திவிட வேண்டும் என்று காங்கிரஸ் ஒருபுறமும், டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சி ஒருபுறமும் தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருகிறது.

பொது சிவில் சட்டம்
ஆனால் மீண்டும் குஜராத்தில் ஆட்சி அமைத்திடும் நோக்கில் பாஜகவும் தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருகிறது. இந்த சூழலில் குஜராத்தில் பொது சிவில் சட்டத்தை அமல்படுத்த ஒரு குழு அமைக்க அம்மாநில அரசு முடிவு எடுத்துள்ளது. இது தொடர்பாக அமைச்சர் கூறுகையில், "பொது சிவில் சட்டத்தை அமல்படுத்த ஒரு குழு அமைக்கப்படும் என மாநில மந்திரிசபை கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டிருக்கிறது" என்று கூறினார்.

3 அல்லது 4 உறுப்பினர்கள்
இது தொடர்பாக மத்திய அமைச்சர் பர்சோத்தம் ரூபாலா கூறுகையில், 'பொது சிவில் சட்டத்தை அமல்படுத்துவதற்காக அமைக்கப்படும் இந்த குழுவுக்கு ஐகோர்ட்டின் ஓய்வுபெற்ற நீதிபதி தலைமை வகிப்பார். இதில் 3 அல்லது 4 உறுப்பினர்கள் இடம்பெறுவர்" என்று கூறினார். இந்த சூழலில் குஜராத் மாநிலம் வட்கம் பகுதியில் நடைபெற்ற தேர்தல் பொதுக்கூட்டத்தில் ஏஐஎம்ஐஎம் கட்சியின் தலைவர் அசாதுதின் ஓவைசி கலந்து கொண்டு பேசினார். அப்போது ஓவைசி கூறியதாவது:-

சமத்துவத்துக்கு எதிரானது
பொது சிவில் சட்டம் என்பது மத்திய அரசின் அதிகார வரம்புக்க்கு உட்பட்டது என்றும் மாநில அரசுக்கு இதில் சம்பந்தம் கிடையாது என்றும் பிரதமர் மோடி உச்ச நீதிமன்றத்தில் கூறியிருந்தார். பிரிக்கப்படாத இந்து கூட்டு குடும்பத்திற்கு வருமான வரிச்சலுகை அளித்துவிட்டு முஸ்லிம் மற்றும் கிறிஸ்தவர்களுக்கு வரிச்சலுகை இன்றி விலக்கு அளிப்பது சமத்துவத்திற்கு எதிரானது இல்லையா?

விருப்பப்பட்டு கோருவதாக இருக்க வேண்டும்
பொதுசிவில் சட்டம் என்பது விருப்பப்பட்டு கோருவதாக இருக்க வேண்டுமே தவிர கட்டாயமாக இருக்கக்கூடாது என்று பாபாசாகேப் அம்பேத்கர் கூறியது உண்மையில்லையா? பாஜக தனது இந்துத்வா அஜெண்டாவை நோக்கியே செல்ல விரும்புகிறது. குறிப்பாக தேர்தல் சமயத்தில் வாக்குகளை பெறுவதற்காக இத்தகைய விவகாரங்களை எழுப்பும் பழக்கத்தை கொண்டுள்ளது.

சட்டத்தை உருவாக்க முடியுமா?
பொது சிவில் சட்டத்திற்கு அவசியமோ.. விருப்பமோ.. இல்லை என்று கடந்த 2018- ஆம் ஆண்டு சட்ட ஆணையம் கூறியிருந்தது. முஸ்லிம்களை பொருத்தவரை திருமணம் என்பது ஒரு ஒப்பந்தம்தான். இந்துக்களுக்கு அப்படியல்ல. வாழ்க்கை முழுவதுக்குமானது. கிறிஸ்தவர்களை பொறுத்தவரை அவரது விருப்பம் மற்றும் செயல். பொது சிவில் சட்டம் அமல்படுத்தப்படுவதன் மூலம் சிறுபான்மை மக்களின் நலன்களை பாதுகாக்கும் சட்டப்பிரிவு 29-க்கு எதிராக யாரேனும் சட்டத்தை உருவாக்க முடியுமா?












Click it and Unblock the Notifications