மோடியின் கயா கூட்டத்தில் பெரும் களேபரம்- பாஜகவினர் மீது போலீசார் தடியடி
கயா: பாரதிய ஜனதாவின் பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி பங்கேற்ற பீகார் கயா பிரசார பொதுக்கூட்டத்தில் பாஜகவின் பெரும் அமளியில் ஈடுபட்டனர். இதனால் போலீசார் தடியடி நடத்தினர்.
லோக்சபா தேர்தலை முன்னிட்டு ஜார்க்கண்ட் மற்றும் பீகாரில் இன்று நரேந்திர மோடி பிரசாரம் மேற்கொள்வார் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஏற்கெனவே பீகாரின் கயாவில் மாவோயிஸ்டுகள் முழு அடைப்புக்கு அழைப்பு விடுத்துள்ளதுடன் மொபைல் டவர்களையும் தகர்த்திருந்தால் மோடி கூட்டத்துக்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
இந்நிலையில் ஜார்க்கண்ட் பிரசாரத்தை முடித்துவிட்டு பீகார் மாநிலத்தின் கயாவுக்கு மாலை 4 மணியளவில் மோடி சென்றார். மோடியின் ஹெலிகாப்டர் வந்திறங்கிய போது பொதுக்கூட்ட மைதானத்தில் இருந்த பாஜக தொண்டர்கள் பெரும் அமளியில் ஈடுபட்டனர்.
பாதுகாப்புக்கு போடப்பட்டிருந்த தடுப்புகளை உடைத்து நொறுக்கிவிட்டு ஆவேசமாக கூச்சல் எழுப்பிக் கொண்டிருந்தனர். அதனால் போலீசார் தடியடி நடத்தி கூட்டத்தை ஒழுங்குபடுத்தினர். இருப்பினும் மோடியின் மேடையை நோக்கி நாற்காலிகளும் காலணிகளும் வீசப்பட அந்த இடமே பெரும் கிளர்ச்சி நடந்த பகுதியாக காட்சியளித்தது.
அப்போது மேடையில் ஏறிய பீகார் பாஜக தலைவர் சுஷில்குமார் மோடி, தொண்டர்களை அமைதி காக்குமாறு கேட்டுக் கொண்டார். ஆனாலும் பாஜகவினர் அமைதி அடையவில்லை. அவர்களை பாதுகாப்புக்கு வந்த போலீசார் கட்டுப்படுத்தினர். இதன் பின்னர் மேடைக்கு வந்த மோடி வழக்கம் போல உரையாற்றினார்.