பாஜகவுக்கு பேதியைக் கொடுத்த சித்தராமையா- "லிங்காயத்"துகளை தனி மதமாக அறிவிக்க ஒப்புதல்!
பெங்களூரு: மதத்தின் பெயரால் வாக்கு வங்கிகளை ஒருமுகப்படுத்தி வந்த பாஜகவுக்கு அதே மதத்தின் பெயரால் பேதிபோக வைத்திருக்கிறார் கர்நாடகா முதல்வர் சித்தராமையா. கர்நாடகாவில் லிங்காயத்துகளை இந்து மதத்தில் இருந்து பிரித்து தனிமதமாக அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கை ஏற்கப்படும் என சித்தராமையா ஒப்புக் கொண்டிருப்பது பாஜகவை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.
கர்நாடகாவில் 11.5% முதல் 19% மக்கள் தொகை கொண்ட சமூகம் லிங்காயத்துகள். மொத்தம் உள்ள 224 சட்டசபை தொகுதிகளில் 110-ல் தீர்மானிக்கும் சக்தியாக லிங்காயத்துகள் இருக்கின்றனர்.
கர்நாடகா சட்டசபைக்கு அடுத்த ஆண்டு தேர்தல் நடைபெற உள்ளது. பொதுவாக லிங்காயத்துகள் பாஜகவுக்கும் ஒக்கலிகா சமூகத்தினர் தேவகவுடாவின் ஐக்கிய ஜனதாதளம், காங்கிரஸுக்கும் ஆதரவாக வாக்களிப்பர்.
லிங்காயத்துகள்- வீரசைவர்கள்
நாட்டின் பிற மாநிலங்களில் பாஜக, இந்துமதத்தின் பெயரால் சிறுபான்மையினரை தனிமைப்படுத்தி இந்து வாக்கு வங்கியை ஒருமுகப்படுத்தியது. ஆனால் கர்நாடகாவிலோ பாஜகவை அதிரவைக்கும் வகையில் 'லிங்காயத்துகளை இந்து சமூகத்தில் இருந்து வேறானவர்கள்.. வீரசைவர்கள் என்ற தனி மதப் பிரிவாக அறிவிக்க கோரும் கோரிக்கை வலுத்து வருகிறது.
அரசு ஒப்புதல்?
இதற்கான பேரணிகளும் நடைபெற்று வருகின்றன. சித்தராமையா அமைச்சரவையில் உள்ள 5 லிங்காயத்து அமைச்சர்கள் மாநிலம் முழுவதும் இதற்காக பிரசாரம் செய்ய உள்ளனர்.
சித்தராமையா ஆதரவு
இந்த கோரிக்கை குறித்து கருத்து தெரிவித்த முதல்வர் சித்தராமையா, லிங்காயத்துகளை தனி மதமாக அறிவிக்கும் கோரிக்கையை அரசு ஏற்கும் என அறிவித்தார். இதற்கு கர்நாடக பாஜக கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
எதியூரப்பா நிராகரிப்பு
அதேநேரத்தில் லிங்காயத்து சமூகத்தைச் சேர்ந்தவரும் பாஜகவின் முதல்வர் வேட்பாளருமான எதியூரப்பா, இந்த கோரிக்கையை நிராகரிப்பதாகவும் இந்துமதத்தின் ஒரு அங்கமே லிங்காயத்துகள்; வீரசைவர்கள் என்பது இந்து மதத்தின் ஒரு பிரிவுதான் என கூறியிருக்கிறார். லிங்காயத்துகளை தனி மதமாக அங்கீகரிக்க கூடாது என கூறியிருக்கிறார். பாஜக எப்போதும் கையிலெடுக்கும் மதம் எனும் அஸ்திரத்தை காங்கிரஸ் இப்போது தனது ஆயுதமாக எடுத்திருக்கிறது!