தேசியக்கொடி அவமதிப்பு: கெஜ்ரிவாலுக்கு எதிராக தேர்தல் ஆணையத்தில் காங்கிரஸ் புகார்
டெல்லி: ஆம் ஆத்மி கட்சி நிகழ்ச்சிகள் நடைபெறும் இடங்களில் எல்லாம் தேசியக் கொடி அசைக்கப்படுவதாகவும், இது தேசியக் கொடியை அவமதிக்கும் செயல் எனவும் காங்கிரஸ் தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்துள்ளது.
கடந்த இரு தினங்களுக்கு முன்னர் டெல்லியில் முதல்வர் கெஜ்ரிவால் தலைமையில் தர்ணா நடைபெற்றது. அப்போது தேசிய கொடி அசைக்கப்பட்டதாகவும், ஆம் ஆத்மியின் இத்தகைய செயல் தேசிய கொடியை அவமதிப்பதாக உள்ளது என்றும் காங்கிரஸ் கட்சியின் சார்பில் தேர்தல் ஆணையத்தில் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இது குறித்து தேர்தல் ஆணைய தலைவர் வி.எஸ். சம்பத்துக்கு, கிஷோர் வார்ஷ்னேய் அனுப்பியுள்ள'பேக்ஸ்' புகாரில், ‘எங்கெல்லாம் ஆம் ஆத்மி மற்றும் அரவிந்த் கெஜ்ரிவாலின் நிகழ்ச்சிகள் நடைபெறுகிறதோ அங்கெல்லாம் தேசிய கொடி அசைக்கப்படுகிறது. அதனை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டுகிறோம்.
மேலும், ஆம் ஆத்மியின் இந்த செயலை தேர்தல் ஆணையம் தடுக்காவிட்டால் நாங்கள் நீதிமன்றத்தை அணுகுவோம்' என கிஷோர் எச்சரித்துள்ளார்..