தேர்தலுக்குப் பின் ஆதரவு கொடுக்க கியூவில் நிற்பாங்க.. கருணாநிதி குறித்து காங். அபிஷேக் சிங்வி!!

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி அலுவலகமான சத்தியமூர்த்தி பவனுக்கு நேற்று வருகை தந்த அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
நாடு முழுவதும் நரேந்திர மோடி அலை இருப்பதாக பாரதிய ஜனதா கட்சியினர் பிரசாரம் செய்து வருகின்றனர். நாடு முழுவதும் சுற்றுப்பயணம் செய்து வரும் நான், மோடி அலையை எங்கும் காணவில்லை. அதனால்தான் மோடியை நம்பாமல் கூட்டணிக் கட்சிகளை பாரதிய ஜனதா கட்சி நம்பிக் கொண்டிருக்கிறது.
தமிழகத்தில் தேமுதிக, பாமக, மதிமுக போன்ற கட்சிகளின் முதுகில் பாஜக சவாரி செய்கிறது. பல ஆண்டுகளுக்குப் பிறகு தமிழகத்தில் காங்கிரஸ் தனித்துப் போட்டியிடுவது பெருமையாக உள்ளது.
இந்தத் தேர்தலில் காங்கிரஸ் கௌரவமான இடங்களில் வெற்றி பெறும். கணிசமான வாக்குகளைப் பெறும். காங்கிரஸ் தனித்துப் போட்டியிடுவது மற்ற கட்சிகளுக்கு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
இளைஞர்களுக்கு வாய்ப்பு அளிக்க வேண்டும் என்பதற்காகவே சிவகங்கையில் கார்த்தி சிதம்பரம் போட்டியிடுகிறார். காங்கிரஸ் தலைவர்கள் அனைவரும் ஒற்றுமையுடன் தேர்தல் பணியாற்றி வருகின்றனர்.
காங்கிரஸ் கட்சி எப்போதும் நன்றி மறந்தது கிடையாது. காங்கிரஸ் நாடு முழுவதும் மக்கள் செல்வாக்குடன் இருக்கும் கட்சி. காங்கிரஸ் நன்றி மறந்து விட்டதாகவும், தேர்தலுக்குப் பிறகு ஆதரவு அளிக்கத் தயாராக இருப்பதாகவும் திமுக தலைவர் கருணாநிதி தெரிவித்துள்ளார். திமுக தாமதமாக விழித்துக் கொண்டுள்ளது.
2009 தேர்தலின்போது காங்கிரஸ் தோற்கும் என்று கருத்துக் கணிப்புகள் கூறின. ஆனாலும் காங்கிரஸ் 2004 தேர்தலைவிட அதிக இடங்களைப் பெற்று ஆட்சி அமைத்தது. அதுபோல இந்தத் தேர்தலில் 2009 வரலாறு திரும்பும்.
மே 16-ந் தேதி தேர்தல் முடிவுகள் வெளியான பிறகு, காங்கிரஸ் கட்சியை நோக்கி ஆதரவு தருவதற்கு மற்ற கட்சிகள் அணிவகுக்கும்.
இவ்வாறு அபிஷேக்சிங்வி கூறினார்.












Click it and Unblock the Notifications