செல்லாத ரூபாய் நோட்டு... மோடியால் இந்தியாவுக்கு தலைகுனிவு.. ஆனந்த் சர்மா குற்றச்சாட்டு
500 மற்றும் 1000 ரூபாய் செல்லாது என்ற அறிவித்து மோடி இந்தியாவிற்கு தலைகுனிவை ஏற்படுத்தியுள்ளார் என்று ஆனந்த் சர்மா கூறியுள்ளார்.
டெல்லி: 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டு செல்லாது என்ற அறிவிப்பால் உண்மையில் கருப்பு பணத்தை பதுக்கியவர்களுக்கு எந்த பாதிப்புமே இல்லை என்று ராஜ்யசபாவில் காங்கிரஸ் எம்பி ஆனந்த் சர்மா பேசியுள்ளார்.
கடந்த 9ம் தேதியில் இருந்து 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டு செல்லாது என்று மத்திய அரசு அறிவித்தது. இதனால் மக்கள் கடும் அவதிக்கு ஆளானார்கள். கையில் பணம் இல்லாமல், போதிய அளவில் வணிகம் நடைபெறாமலும், சில்லறை இல்லாமலும் மக்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில், இன்று நாடாளுமன்றத்தின் குளிர்காலக் கூட்டத் தொடர் தொடங்கியது. இதில் காங்கிரஸ் உட்பட எதிர்க்கட்சிகள் ரூபாய் நோட்டுகள் செல்லாது அறிவிப்பு குறித்து கடுமையாக எதிர்த்து பேச திட்டமிட்டிருந்தன. தற்போது ராஜ்யசபாவில் காங்கிரஸ் எம்.பி. ஆனந்த் சர்மா பேசி வருகிறார். அப்போது , ரூபாய் நோட்டு செல்லாது என்று அறிவிப்பு செய்து மோடி இந்தியாவிற்கு தலைகுனிவை ஏற்படுத்தியுள்ளார் என்று கடுமையாக பேசினார்.
மேலும், ராஜ்யசபாவில் ஆனந்த் சர்மா பேசியதாவது:
கருப்புப் பணம் பதுக்கியவர்களுக்கு எந்தவித பாதிப்பும் இந்த அறிவிப்பால் ஏற்படவில்லை. ஏழை விவசாயிகளும், நடுத்தர மக்களும் கருப்பு பணம் பதுக்கியவர்களா? டெபிட், கிரெடிட் கார்ட்டு மூலம் பணப்பரிவத்தனை செய்யச் சொல்வது நியாயமற்றது. ஏழைகள், கூலி வேலை செய்வோரிடம் வங்கி கணக்கே இல்லாதபோது டெபிட் கார்ட்டுகள் எப்படி அவர்களிடம் இருக்கும்?
இந்திய பொருளாதாரத்தையே கருப்பு பொருளாதாரம் என முத்திரை குத்திவிட்டார் நரேந்திர மோடி. மருத்துவப்பட்டமே பெறாதவர்கள் அறுவைச் சிகிச்சை செய்ய வந்துவிட்டார்கள். மோடியின் நடவடிக்கையால் இந்தியாவிற்கே தலைகுனிவு ஏற்பட்டுள்ளது.
கருப்புப் பணத்தை பதுக்கி உள்ளவர்களின் பெயரை அரசு உடனே வெளியிட வேண்டும். மத்திய அரசின் நடவடிக்கையால் நாட்டில் நிதி குளறுபடி ஏற்பட்டுவிட்டது. ஆட்சியாளர்களின் நண்பர்களுக்கே அரசின் நடவடிக்கை உதவி உள்ளது. அரசு வெளியிட்டுள்ள 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளால் சில்லறை மாற்ற முடியாமல் மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். எந்தவித பரிவுணர்வும் இல்லாத அரசுதான் தற்போதுள்ள பாஜக அரசு என்று ஆனந்த் சர்மா குற்றம்சாட்டியுள்ளார்.












Click it and Unblock the Notifications