போப்பையா நியமனத்தை எதிர்த்து காங். வழக்கு-உச்ச நீதிமன்றம் காலை 10.30 மணிக்கு விசாரிக்கிறது!
கர்நாடக சட்டசபை தற்காலிக சபாநாயகராக போப்பையா நியமிக்கப்பட்டுள்ளார். இதை எதிர்த்து காங்கிரஸ் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
டெல்லி: கர்நாடக சட்டசபையின் தற்காலிக சபாநாயகராக கே.ஜி. போப்பையா நியமிக்கப்படதற்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என்றும் கோரப்பட்டுள்ளது. இந்த வழக்கு காலை 10.30 மணிக்கு உச்ச நீதிமன்றம் விசாரிக்க உள்ளது.
கர்நாடகா சட்டசபையில் எடியூரப்பா அரசு பெரும்பான்மையை நாளை மாலை 4 மணிக்கு நிரூபிக்க உள்ளது. இதற்காக தற்காலிக சபாநாயகராக பாஜகவைச் சேர்ந்த கே.ஜி. போப்பையா நியமிக்கப்பட்டுள்ளார்.
சட்டசபையின் மிகவும் மூத்த எம்எல்ஏவான காங்கிரஸ் கட்சியின் ஆர்வி. தேஷ்பாண்டே தற்காலிக சபாநாயகராக நியமிக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் கேஜி போப்பையாவை தற்காலிக சபாநாயகராக ஆளுநர் வாஜூபாய் வாலா நியமித்துள்ளார்.
தேஷ்பாண்டேவுக்கு அடுத்ததாக, பாஜகவைச் சேர்ந்த உமேஷ் விஸ்வநாத் கட்டிதான் மூத்த எம்எல்ஏ. ஆனால் அவருடைய பெயரையும் ஆளுநர் பரிசீலிக்கவில்லை. ஆளுநரின் இந்த முடிவு சர்ச்சையாகி உள்ளது.
ஏற்கனவே எடியாரப்பாவுக்கு ஆதரவாக செயல்பட்டவர் போப்பையா. அவரை தற்காலிக சபாநாயகராக நியமித்துள்ளதற்கு காங்கிரஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில், போப்பையா நியமனத்தை எதிர்த்து காங்கிரஸ் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இதை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என்றும் கோரப்பட்டுள்ளது. இந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் இன்று காலை 10.30 மணிக்கு விசாரணைக்கு வருகிறது.