உகாண்டா தூதரகத்திலிருந்து யாரும் ஆம் ஆத்மி அமைச்சரை பாராட்டவில்லை - உள்துறை அமைச்சகம்
டெல்லி: டெல்லியில் ஆம் ஆத்மி சட்ட அமைச்சர் சோம்நாத் பார்தி நடத்திய ரெய்டு தொடர்பாக, அவரைப் பாராட்டி உகாண்டா தூதரகத்திலிருந்து யாரோ ஒரு அதிகாரி நேரில் போய் கடிதம் கொடுத்ததாக ஆம் ஆத்மி கட்சி கூறுவது வெறும் வதந்தியே. அதை யாரும் நம்ப வேண்டாம் என்று மத்திய உள்துறை அமைச்சகம் கூறியுள்ளது.
ஆனால் கடிதம் கொடுத்து பார்தியை பாராட்டியதாக கெஜ்ரிவால் நேற்றுதான் கூறியிருந்தார். ஆனால் உகாண்டா தூதரகத்தில் எந்த அதிகாரியும் இல்லை, யாருமே ஊரிலேயே இல்லை என்று உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளதால், கெஜ்ரிவால் சொல்வது உண்மையா அல்லது உள்துறை அமைச்சகம் கூறுவது உண்மையா என்ற பெரும் குழப்பம் வெடித்துள்ளது.
இதற்கிடையே, இதுகுறித்து மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சல்மான் குர்ஷித் கருத்து தெரிவிக்கையில், பிற நாடுகளுடனான இந்தியாவின் உறவு கெட்டுப் போகும் வகையில் ஆம் ஆத்மி கட்சி செயல்படுவது வருத்தம் தருகிறது என்றார்.
இந்த நிலையில், வெளியுறவுத்துறை அமைச்சக செய்தித் தொடர்பாளர் சையத் அக்பருதீன் வெளியிட்டுள்ள ஒரு டிவிட்டர் செய்தியில், உகாண்டா தூதரக பணியாளர்கள் அனைவரும் தற்போது டெல்லியிலேயே இல்லை. எனவே வதந்திகளுக்கு இடம் கொடுக்க வேண்டாம் என்று கேட்டுக் கொண்டுள்ளார்.
ஆனால் நேற்று தர்ணாவில் ஈடுபட்டிருந்த கெஜ்ரிவால் பேசுகையில், உகாண்டா தூதரக அதிகாரி ஒருவர் பாரதியை நேரில் சந்தித்து பாராட்டுக் கடிதம் கொடுத்ததாக கூறியிருந்தார் என்பதால் யார் சொல்வது உண்மை, யார் புருடா விடுகிறார்கள் என்பது தெரியவில்லை.