தமிழர்கள் இருக்கும் இடம்.. மகாராஷ்டிராவில் ராக்கெட் வேகத்தில் கொரோனா.. என்ன நடந்தது, எப்படி பரவியது?
மகாராஷ்டிராவில்தான் இந்தியாவிலேயே அதிகமான நபர்களுக்கு கொரோனா வைரஸ் தாக்கியுள்ளது. அங்கு நினைத்து பார்க்க முடியாத வேகத்தில் இந்த வைரஸ் பரவி வருகிறது.
மும்பை: மகாராஷ்டிராவில்தான் இந்தியாவிலேயே அதிகமான நபர்களுக்கு கொரோனா வைரஸ் தாக்கியுள்ளது. அங்கு நினைத்து பார்க்க முடியாத வேகத்தில் இந்த வைரஸ் பரவி வருகிறது
Recommended Video
கொரோனா வைரஸ் வேகம் குறையாமல் தொடர்ந்து உலகம் முழுக்க 120 நாடுகளில் பரவி வருகிறது. இந்த வைரஸை கட்டுப்படுத்துவது எப்படி என்று உலகில் உள்ள எந்த நாட்டு மருத்துவருக்கு தெரியவில்லை. உலகம் முழுக்க மொத்தம் 157,197 பேர் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள்.
இதுவரை இந்த வைரஸால் 5,839 பேர் பலியாகி உள்ளனர். இந்தியாவில் 107 பேருக்கு இந்த வைரஸ் தாக்கியுள்ளது. இந்தியாவில் இருக்கும் இத்தாலி பயணிகள் உட்பட 17 வெளிநாட்டினருக்கும் இந்த வைரஸ் தாக்கியுள்ளது.
முதல்ல அந்த துவைக்காத கம்பளி, ஜன்னல் திரைகளை அகற்றுங்க.. கொரோனா வரப் போகுது.. ரயில்வே அதிரடி உத்தரவு
ராக்கெட் வேகம்
இந்தியாவில் இந்த வைரஸ் ராக்கெட் வேகத்தில் பரவி வருகிறது. முதலில் கேரளாவில்தான் இந்த வைரஸ் வேகமாக பரவியது. தற்போது மகாராஷ்டிராவில் இந்த வைரஸ் வேகம் எடுத்துள்ளது. கேரளாவை விட இந்த வைரஸ் மகாராஷ்டிராவில்தான் வேகமாக பரவி வருகிறது. கேரளாவில் 22 பேருக்கு இந்த வைரஸ் ஏற்பட்டுள்ளது. மகாராஷ்டிராவில் 31 பேருக்கு வைரஸ் தாக்கியுள்ளது.
எங்கு பரவியது
மகாராஷ்டிராவில் புனேவில்தான் அதிக பேருக்கு வைரஸ் தாக்கியுள்ளது. அங்கு 15 பேர் இதனால் பாதிக்கப்பட்டுள்ளனர். மும்பையில் 7 பேர் இதனால் பாதிக்கப்பட்டுள்ளனர். நாக்பூரில் 6 பேர் இதனால் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள். அதேபோல் கமோதே, நவி மும்பை, கல்யாண் நகர், அஹம்மதுநகர் , தானே ஆகிய நாடுகளிலும் பலருக்கு இந்த வைரஸ் தாக்கியுள்ளது.
தமிழர்கள் எப்படி
அதேபோல் அங்கு தமிழர்கள் அதிகம் வசிக்கும் நவி மும்பை பகுதியிலும் இந்த வைரஸ் வேகமாக பரவி வருகிறது. நவி மும்பை பகுதியில் மக்கள் நெருக்கடி அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது. அங்கு இதுவரை 3 பேருக்கு வைரஸ் தாக்குதல் உறுதி செய்யப்பட்டுள்ளது. இங்கு நிறைய ஏழை மக்கள், அன்றாட தொழிலாளிகள் இருக்கிறார்கள். மும்பையின் தற்போதைய வளர்ச்சிக்கு இவர்களின் பங்கு மிக முக்கியம் ஆகும்.
சரியாக செய்யவில்லை
மகாராஷ்டிராவில் வைரஸ் வேகமாக பரவ நிறைய காரணங்கள் சொல்லப்படுகிறது. முதல் காரணமாக, அங்கு வைரஸ் தொடார்பான சோதனைகள் விமான நிலையத்தில் சரியாக செய்யப்படவில்லை. சென்னை விமான நிலையத்தில் செய்யப்படுவது போல மிக கடுமையான சோதனைகள் எதுவும் அங்கு செய்யப்படவில்லை. அதேபோல் சந்தேகத்திற்கு உரிய நபர்களை உடனே சோதிக்கவும் அவர்கள் தவறி விட்டார்கள்.
சோதனை தாமதம்
சோதனைக்கு எடுத்த ரத்த மாதிரிகளை உடனே சோதித்து முடிவுகளை அறிவிக்கவில்லை. புனேவில்தான் தொடக்கத்தில் கொரோனா வைரஸ் சோதனை செய்யப்பட்டது. ஆனாலும் கூட மகாராஷ்டிராவில் கொரோனா சோதனை செய்ய நீண்ட நேரம் எடுத்துக்கொள்ளப்பட்டது. இதனால் எத்தனை பேருக்கு இந்த வைரஸ் தாக்குதல் உள்ளது, எத்தனை பேருக்கு இல்லை என்பதை கண்டுபிடிக்கவே நேரம் எடுத்தது.
சரியான விழிப்புணர்வு
அதேபோல் கொரோனா குறித்து அம்மாநில சிவசேனா கூட்டணி அரசு சரியான விழிப்புணர்வை ஏற்படுத்தவில்லை. போதுமான அளவிற்கு விழிப்புணர்வு நடவடிகைகள், போர்க்கால அறிவிப்புகள் எதையும் செய்யவில்லை. கேரளாவில், பெங்களூரில் கொரோனா வைரஸ் பரவிய போதும் கூட, மும்பையில் ரயில்கள் அதே நெருக்கடியோடுதான் பயணித்துக் கொண்டு இருந்தது.
மக்கள் நெருக்கடி
அங்கு இயல்பாகவே மக்கள் நெருக்கடி அதிகம். மக்கள் நெருக்கடி அதிகம் என்பதால் அங்கு கொரோனாவை கட்டுப்படுத்துவது மிக மிக கடினம். அதேபோல் அங்கு ஐடி ஊழியர்களுக்கு பெரிதாக வீட்டில் இருந்து வேலை பார்க்கும் வாய்ப்புகள் வழங்கப்படவில்லை. கொரோனா தொடர்பாக எந்த விதமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் அம்மாநில அரசு எடுக்கவில்லை.
அரசு தாமதம்
இதெல்லாம் போக அங்கு 19 பேருக்கு கொரோனா ஏற்பட்ட பின்பும் கூட, பொது இடங்களில் மக்கள் நிரம்பி வழிந்தனர். மருத்துவமனைகள் தயார் செய்யப்படவில்லை. உலகமே கொரோனா குறித்து அச்சப்பட்ட போது, ராமர் கோவிலுக்கு நிதி உதவி அளிப்பது தொடர்பாக அம்மாநில முதல்வர் உத்தவ் தாக்கரே ஆலோசனை செய்து வந்தார். கொரோனா அவரச கூட்டமே அங்கு இன்று காலைதான் நடந்தது.
இப்போது நடவடிக்கை
இப்போதுதான் அங்கு சில நகரங்களில் பொது இடங்களை மூட உத்தரவிட்டு இருக்கிறார்கள். முக்கியமாக புனேவில் கல்லூரிகள், பள்ளிகள் மூடப்பட்டுள்ளது. மற்ற சில நகரங்களில் பொது இடங்களில் வெளியே செல்ல கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு இருக்கிறது. இதனால்தான் அங்கு ஒரே நாளில் 12 பேருக்கு இன்று கொரோனா தாக்கியது. கண் கெட்ட பின்பே சூரிய உதயம் என்பது போல மஹாராஷ்டிரா அரசு மிக தாமதமாக செயல்பட்டுள்ளது.