வெற்றி யாருக்கு.. இன்று கர்நாடக சட்டசபை தேர்தல் வாக்கு எண்ணிக்கை.. காலை 11 மணிக்குள் முழு டிரெண்ட்
இன்று காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை துவங்குகிறது. காலை 11 மணிக்கெல்லாம் வெற்றி நிலவரம் பற்றிய டிரெண்ட் நன்கு தெரிந்துவிடும். மாலை 6 மணிக்குள்ளாக முழு ரிசல்ட்டுகளும் வெளியாகிவிடும் என்று எதிர்பார்க்க
Recommended Video
பெங்களூர்: பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள கர்நாடக சட்டசபை தேர்தலுக்கான, வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெறுகிறது.
காங்கிரஸ், பாஜக மற்றும் மதசார்பற்ற ஜனதாதளம் (மஜத) ஆகிய கட்சிகள் இடையே மும்முனை போட்டி நடைபெறுகிறது. தேர்தல் முடிவுகள் குறித்த டிரெண்ட் காலை 11 மணிக்கெல்லாம் தெரிய ஆரம்பித்துவிடும்.
கர்நாடக சட்டசபைக்கான தேர்தல் கடந்த 12ம் தேதி சனிக்கிழமை காலை 7 மணி முதல் மாலலை 6 மணி வரை நடைபெற்றது. ஆளும் காங்கிரஸ், எதிர்க்கட்சிகளான பாஜக மற்றும் மஜத நடுவே கடும் போட்டி நிலவிய இத்தேர்தல், அடுத்த ஆண்டு நடைபெற உள்ள லோக்சபா தேர்தல்களுக்கான முன்னோட்டமாக பார்க்கப்படுகிறது.
224 தொகுதிகளை கொண்ட கர்நாடகாவில், ஜெயநகர் மற்றும் ராஜராஜேஷ்வரி நகர் ஆகிய 2 தொகுதிகளை தவிர்த்து, 222 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெற்றது. ஜெயநகரில் பாஜக வேட்பாளர் விஜயகுமார் மரணமடைந்ததாலும், ராஜராஜேஷ்வரி நகரில், போலி வாக்காளர் அடையாள அட்டைகள் பல பறிமுதல் செய்யப்பட்டதாலும் தேர்தல் நடைபெறவில்லை.
பாஜக 222 தொகுதிகளிலும் போட்டியிட்ட நிலையில், காங்கிரஸ் 221, மஜத 201 அதன் கூட்டணி கட்சியான பகுஜன் சமாஜ் 18, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி 19 தொகுதிகளில் போட்டியிட்டன.
தேர்தல் நிறைவடைந்ததும், வாக்குப் பெட்டிகள் பத்திரமாக எடுத்துச் செல்லப்பட்டு, பெங்களூர், மைசூர் நகரங்கள் உட்பட, மொத்தம் 38 வாக்கு எண்ணும் மையங்களில் வைக்கப்பட்டன. வாக்குப்பதிவு மையங்களுக்கு 24 மணி நேரமும் துப்பாக்கி ஏந்திய போலீஸ் மற்றும் துணை ராணுவ பாதுகாப்பு வழங்கப்பட்டது.
இதனிடையே இன்று காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை துவங்குகிறது. காலை 11 மணிக்கெல்லாம் வெற்றி நிலவரம் பற்றிய டிரெண்ட் நன்கு தெரிந்துவிடும். மாலை 6 மணிக்குள்ளாக முழு ரிசல்ட்டுகளும் வெளியாகிவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பெங்களூரில் அதிகபட்சமாக 5 மையங்களிலும், அடுத்தபடியாக தும்கூரில் 3 மையங்களிலும் வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.
ஒவ்வொரு மையத்திலும், 20 முதல் 23 டேபிள்கள் போடப்பட்டுள்ளன. வாக்கு எண்ணிக்கையில், 11,160 பணியாளர்கள் ஈடுபட உள்ளனர். தேர்தல் முடிவுகளுக்காக நாடே எதிர்பார்ப்புடன் காத்துள்ளது.