மோடி அரசின் 'இஸ்ரேல்' ஆதரவு கொள்கைக்கு மார்க்சிஸ்ட் கட்சி கடும் கண்டனம்!
டெல்லி: பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசின் 'இஸ்ரேல்' ஆதரவு கொள்கைக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
காஸா பகுதியில் நடத்தப்பட்டு வரும் தாக்குதலில் 40 குழந்தைகள் உட்பட 220 பாலஸ்தீனியர்கள் உயிரிழந்துள்ளனர். இஸ்ரேலின் இந்த ஆக்கிரமிப்பு தாக்குதலை மோடி அரசு நிச்சயம் கண்டிக்க வேண்டும் என்பதுதான் அனைவரது எதிர்பார்ப்பு.
நம்பகமற்ற நிலைப்பாடு
ஆனால் இஸ்ரேலின் ஆக்கிரமிப்பை கண்டிக்காமல் நம்பகமற்ற ஒரு நிலைப்பாட்டை மேற்கொண்டிருக்கிறது. இது குறித்து அறிக்கை வெளியிட்ட மத்திய வெளியுறவு அமைச்சகம், தற்போதைய வன்முறைக்கு காரணமாக இருதரப்பையும் சுட்டிக்காட்டியது.
லோக்சபாவில் விவாதத்துக்கு மறுப்பு
இதனைத் தொடர்ந்து லோக்சபாவில் காஸா மீதான இஸ்ரேலின் தாக்குதல்களை கண்டிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் வலியுறுத்தின. ஆனால் மத்திய அரசு மறுத்துவிட்டது.
ராஜ்யசபாவில் தடுத்து நிறுத்திய சுஷ்மா
ராஜ்யசபாவிலோ காஸா மீதான தாக்குதல்கள் குறித்து விவாதம் நடைபெறும் என்று அலுவல் குறிப்பில் குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால் மத்திய வெளிய்றவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜோ, இருநாடுகளுடனும் இந்தியா வைத்துள்ள உறவு பாதிக்கும் என்பதால் விவாதம் கூடாது பேசினார்.
பாலஸ்தீன ஆக்கிரமிப்பு கண்டிக்கத்தக்கது
இது மிகவும் தவறான நிலைப்பாடு. பாலஸ்தீனத்தை இஸ்ரேல் ஆக்கிரமித்துக் கொண்டிருக்கிறது. அது மிகவும் வன்மையாக கண்டிக்கத்தக்கது.
பாலஸ்தீன ஆதரவுதான் இந்தியாவின் கொள்கை
இந்த விவகாரத்தில் நீண்டகாலமாக இந்திய அரசு, பாலஸ்தீனத்துக்கு ஆதரவான கொள்கையைத்தான் கடைபிடித்து வருகிறது.
இஸ்ரேல் ஆதரவு- மோடி அரசின் கொள்கை
ஆனால் மோடி அரசு 'இஸ்ரேலுக்கு' ஆதரவு தரும் நிலைப்பாட்டை மேற்கொள்கிறது. இது ஏற்புடையது அல்ல.
இஸ்ரேலின் பாலஸ்தீன ஆக்கிரமிப்பு மற்றும் அப்பாவி பொதுமக்களை இஸ்ரேல் படுகொலை செய்வதை எதிர்க்கின்றன நிலைப்பாட்டைத்தான் மத்திய அரசு எடுக்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கட்சியின் மத்திய குழு கேட்டுக் கொள்கிறது.
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.