5 வீடு, 6 மனைகள், 3 கார்கள், லாக்கர் நிறைய தங்கம், வெள்ளி: இது ஒரு கான்ஸ்டபிளின் சொத்து
இந்தூர்: மத்திய பிரதேச மாநிலத்தில் லோக் ஆயுக்தா போலீசார் நடத்திய சோதனையில் கான்ஸ்டபிள் ஒருவருக்கு 5 சொகுசு வீடுகள், 6 மனைகள், 3 கார்கள், ஒரு எஸ்.யு.வி இருப்பது தெரிய வந்துள்ளது.
மத்திய பிரதேச மாநிலம் ஜபல்பூரில் உள்ள ஆர்.டி.ஓ. அலுவலகத்தில் தலைமை கான்ஸ்டபிளாக இருப்பவர் அருண் சிங். லஞ்சம் வாங்க பெயர் போனவர். அவர் கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு தான் ஜபல்பூருக்கு பணிமாற்றம் செய்யப்பட்டார். பணிமாற்றம் செய்யப்பட்டதில் இருந்து அவர் பணிக்கு வராமல் இருந்துள்ளார்.
இதையடுத்து ஆர்.டி.ஓ. அலுவலக அதிகாரிகள் அவர் பணிக்கு வராமல் இருப்பது பற்றி போபால் அலுவலக அதிகாரிகளிடம் புகார் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் இந்தூர், ரேவா மற்றும் சத்னா ஆகிய நகரங்களில் உள்ள அருண் சிங்கின் வீடுகளில் லோக்ஆயுக்தா போலீசார் சோதனை நடத்தினர்.
இந்தூர் அண்ணபூர்னா பகுதியில் உள்ள அவரது வீட்டில் இருந்து பல்வேறு ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டது. அதன்படி அவருக்கு தலவாலிசந்தா பகுதியில் தலா 6 ஆயிரம் சதுர அடியில் இரண்டு மனைகள், மோ ரோட்டில் பண்ணை வீடு, மனைவி பெயரில் மனை, மகன் பெயரில் இரண்டு வீடுகள், போக்பாலில் அருண் பெயரில் வீடு, அனந்தபுரியில் இரண்டு மனைகள், நரேந்திரா நகரில் ஒரு மனை, நிபுஹாவில் 30 ஏக்கர் நிலம், ஒரு வீடு, ஹர்திகுர்தில் நிலம் ஆகியவை உள்ளன.
சோதனையின்போது அருண் சிங்கின் வீடுகளில் இருந்து நகை, பணம் ஆகியவையும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. வங்கி லாக்கரில் துப்பாக்கி, தோட்டாக்கள், 132 கிராம் தங்கம், 2 கிலோ வெள்ளி ஆபரணங்கள் இருந்தது தெரிய வந்துள்ளது.
அருண் சிங்கிற்கு சொந்தமாக 3 கார்கள் மற்றும் ஒரு எஸ்யுவியும் உள்ளது. இத்தனை சொத்துக்களையும் அவர் லஞ்சப் பணம் மூலம் வாங்கியுள்ளார். 32 ஆண்டு காலம் பணி புரிந்ததில் அவர் வருமானத்தை விட அதிகமாக கோடிக் கணக்கில் சொத்து சேர்த்துள்ளார்.