புயல் பாதித்த பகுதிகளில் சரிவர வேலை பார்க்காத அதிகாரிகளை கைது செய்ய நாயுடு உத்தரவு!
ஹைதராபாத்: ஆந்திராவில் ஹூட் ஹூட் புயலால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் சீரமைப்பு பணிகளில் ஈடுபடாத அதிகாரிகளை கைது செய்ய அம்மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு அதிரடியாக உத்தரவிட்டுள்ளார்.
ஆந்திராவின் விசாகப்பட்டனம் உள்ளிட்ட பகுதிகள் ஹூட் ஹூட் புயலால் கடும் பாதிப்பை சந்தித்துள்ளன. மக்கள் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
பால், பெட்ரோல், தண்ணீர் என அனைத்துக்கும் பெரும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் சீரமைப்புப் பணிகளில் ஈடுபடாதோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க முதல்வர் சந்திரபாபு நாயுடு உத்தரவிட்டுள்ளார்.
அதுபற்றி கூறுகையில், மக்கள் மிகவும் இன்னலுக்கு உள்ளாகி உள்ள இந்த தருணத்தில் அவர்களின் புகாரை ஏற்றுக்கொண்டு உதவிட தொலைத்தொடர்பு நிறுவனங்கள் முன்வர வேண்டும். அதைவிடுத்து இந்த சூழ்நிலையை பயன்படுத்தி லாபம் சம்பாதிக்க பார்க்கக் கூடாது.
அதேபோல மற்ற துறை அதிகாரிகளும் மக்களுக்கான தேவைகளை பூர்த்தி செய்வதில் கவனம் செலுத்த வேண்டும்.
மக்களுக்கு உதவி செய்யாத அதிகாரிகளை கைது செய்து தன்னிடம் கொண்டு வருமாறு உத்தரவிட்டிருப்பதாக தெரிவித்தார்.