தாத்ரி கொலை சம்பவத்தில் காவல்துறை குற்றப்பத்திரிகை தாக்கல்! மாட்டிறைச்சி என்ற வார்த்தையே இல்லை
லக்னோ: தாத்ரியில் இஸ்லாமிய முதியவர் படுகொலை சம்பவம் நடந்து 3 மாதத்திற்கு பிறகு 15 பேரின் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஆனால், மாட்டிறைச்சி என்ற வார்த்தை குற்றப்பத்திரிகையில் இடம்பெறவில்லை.
கடந்த செப்டம்பர் மாதம் 28ம் தேதி உத்தரப்பிரதேச மாநிலம், தாத்ரியில் ஒரு குடும்பம் மாட்டிறைச்சி சமைத்து உண்டதாக வதந்தி பரவியது. அதன் தொடர்ச்சியாக முகமது அக்லக் (52) என்ற இஸ்லாமிய முதியவர் அக்கிராமத்தை சேர்ந்த ஒரு கும்பலால் அடித்து கொல்லப்பட்டார்.

மாட்டிறைச்சிக்காக மனித உயிர் கொலை செய்யப்பட்டுள்ளதாக கூறி நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்த படுகொலை சம்பவம் நடைபெற்று 3 மாதங்கள் முடிந்துள்ள நிலையில் 15 பேர் மீது நேற்று குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதில் இரண்டுபேர் சிறுவர்களாகும். அக்லக்கின் மகள், இதில் முக்கிய சாட்சியாக சேர்க்கப்பட்டுள்ளார்.
இந்த சம்பவத்திற்கு முக்கிய காரணமாக செயல்பட்டதாக உள்ளூர் பா.ஜ.க. தலைவர் சஞ்சய் ராணாவின் மகன் விஷால் என்பவர் பெயரும் காவல்துறையின் குற்றப்பத்திரிகையில் இடம்பெற்றுள்ளது.
இவ்வழக்கில் தொடர்புடைய 7 பேர் கடந்த இரு நாட்களில் கைது செய்யப்பட்டுள்ளனர். அதேநேரம், காவல்துறை தாக்கல் செய்துள்ள குற்றப்பத்திரிகையில் மாட்டிறைச்சி என்ற வார்த்தை இடம்பெறவில்லை என்று தகவல் வெளியாகியுள்ளது. உ.பியில் அகிலேஷ் யாதவ் தலைமையிலான சமாஜ்வாதி கட்சி ஆட்சி நடைபெற்றுவருவது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications