மருத்துவ மாணவி பலாத்காரம் செய்யப்பட்ட பேருந்து: திரும்பக் கேட்கும் உரிமையாளர் மனைவி
டெல்லி: டெல்லியில் மருத்துவமாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட பேருந்தின் உரிமையாளரின் மனைவி விசாரணைக்காக நீதிமன்றம் வசம் உள்ள தங்களது பேருந்துகளை மீண்டும் தங்களிடம் ஒப்படைக்குமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
கடந்த வருடம் டிசம்பர் மாதம் நண்பருடன் சினிமாவுக்குச் சென்று திரும்பிய மருத்துவ மாணவி ஒருவர், பேருந்தில் வைத்து மிகக் கொடூரமான முறையில் 6 பேர் கொண்ட கும்பலால் பாலியல் பலாத்காரம் செய்யப் பட்டார். பிறகு, பாலத்தில் இருந்து தூக்கி வீசப் பட்ட அம்மாணவி சிகிச்சை பலனின்றி பரிதாபமாகப் பலியானார்.
இந்தியாவை உலுக்கிய இந்தப் பாலியல் பலாத்கார வழக்கில், ஒரு குற்றவாளி தற்கொலை செய்து கொண்ட நிலையில், மற்றொரு குற்றவாளி சிறுவர் சிறையிலும், மீதமுள்ள நான்கு குற்றவாளிகளுக்கு தூக்குத் தண்டனையும் கொடுக்கப்பட்டுள்ளது.
தண்டனை பெற்றவர்கள் மேல் முறையீடு செய்துள்ளனர். மாணவியை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்குவதற்குப் பயன்படுத்திய பேருந்து தற்போது சாகேத் காவல் நிலையத்தில் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கற்பழிப்பு நடந்த அந்தப் பேருந்தின் உரிமையாளரின் மனைவி பேருந்தை திரும்ப ஒப்படைக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளார்.
இது தொடர்பாக அவர் தெரிவித்துள்ளதாவது, ‘மாணவி பாலியல் வன்கொடுமை சம்பவத்தை அடுத்து எனது கணவரையும் கைது செய்தனர். அச் சம்பவத்தில் பயன்படுத்தப்பட்ட பேருந்து உள்பட எங்களுடைய 11 பேருந்துகளையும் பறிமுதல் செய்துவிட்டனர். கணவரும் தற்போது சிறையில் இருக்கிறார். இரண்டு பெண் குழந்தைகளை வைத்துக் கொண்டு வருமானம் இல்லாமல் துன்பப்பட்டுக் கொண்டிருக்கிறேன். வழக்கு முடிந்துவிட்டதால் எங்கள் பேருந்துகளை திரும்ப ஒப்படைக்கும்படி நீதிமன்றத்தின் மூலம் கேட்கப் போகிறோம்' என்றார்.
பலாத்கார வழக்கிற்காக பேருந்தின் ஆவணங்களின் சோதிக்கப் பட்டதில், அதன் போலித் தன்மை கண்டுபிடிக்கப்பட்டது. அதனையடுத்து மற்ற 10 பேருந்துகளின் ஆவணங்களும் ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்பட்டதில், அனைத்துப் பேருந்துகளும் போலி விவரங்கள் கொடுத்துப் பதிவு செய்யப்பட்டிருப்பது தெரிய வந்தது. எனவே தான், அனைத்துப் பேருந்துகளும் பறிமுதல் செய்யப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.