பாலியல் குற்றச்சாட்டு: முன்னாள் நீதிபதி தொடர்பான செய்திகளை வெளியிட ஊடகங்களுக்கு கட்டுப்பாடு
டெல்லி: பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளான முன்னாள் நீதிபதி சுவதந்தர்குமார் பற்றிய செய்திகளை வெளியிட ஊடகங்களுக்கு டெல்லி உயர்நீதிமன்றம் தடைவிதித்துள்ளது.
உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி சுவதந்தர் குமார் மீது பயிற்சி பெண் வக்கீல் பாலியல் குற்றச்சாட்டுகள் கூறினார். இதையடுத்து நீதிபதி ஸ்வதந்தர் குமார் டெல்லி உயர்நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் இதுதொடர்பாக மத்திய அரசு பதில் அளிக்க நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டது.
இந்நிலையில், நீதிபதி ஸ்வதந்தர் குமார் வழக்கு இன்று டெல்லி உயர்நீதிமன்றத்தில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, அவர் மீதான பாலியல் புகார் குறித்த செய்திகளை ஊடகங்கள் வெளியிட உயர்நீதிமன்றம் கட்டுப்பாடு விதித்தது.
அவருக்கு எதிரான சர்ச்சைக்குரிய செய்திகளை 24 மணி நேரத்திற்குள் நீக்க வேண்டும் என்று 2 தொலைக்காட்சி மற்றும் ஒரு நாளிதழுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதுதொடர்பாக அந்த நிறுவனங்கள் விளக்கம் அளிக்கவும் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிடப்பட்டது.
மேலும், எந்த செய்தியிலும் நீதிபதி ஸ்வதந்தர் குமாரின் புகைப்படத்தை வெளியிடக்கூடாது என்றும் ஊடகங்களை நீதிபதிகள் கேட்டுக்கொண்டனர்.
இந்த வழக்கின் அடுத்த விசாரணையை பிப்ரவரி 24-ம் தேதிக்கு ஒத்திவைத்த நீதிபதிகள், அதுவரை ஊடகங்கள் மீதான கட்டுப்பாடு நீடிக்கும் என்று தெரிவித்தனர்.