டெல்லி மக்களே உஷார்.. 'ஆப்பாயில்' கோழி இறைச்சியை அரைவேக்காடாக சாப்பிடாதீர்கள்!
டெல்லி: டெல்லியில் பரவைக் காய்ச்சல் வேகமாக பரவி வருவதால், முட்டை, கோழி இறைச்சி உள்ளிட்டவற்றை அரைவேக்காடாக உட்கொள்ள வேண்டாம் என மாநில அரசு அறிவுறுத்தியுள்ளது.
அண்மையில், டெல்லி வன உயிரியல் பூங்காவிலும் பறவைகள் மர்மமான முறையில் உயிரிழந்தன. அவற்றின் உடல்களை பரிசோதனை செய்த மருத்துவர்கள், பறவை காய்ச்சலால் அவை உயிரிழந்ததை உறுதிப்படுத்தி உள்ளனர். இதே போல், மான் பூங்காவிலும் பறவை காய்ச்சல் பரவி, அங்கும் பறவைகள் பலியாயின. இதனால் உயிரியல் பூங்கா, மான் பூங்கா ஆகியவை மூடப்பட்டுள்ளன.
டெல்லியில் பறவை காய்ச்சலுக்கு இது வரை 58 பறவைகள் பலியாகியுள்ன. அதே போல், மத்திய பிரதேச மாநிலம் குவாலியர் உயிரியல் பூங்காவில் பரமாரிக்கப்பட்டு வந்த 18 பறவைகள் கடந்த சில தினங்களுக்கு முன்பு உயிரிழந்தன. இதையடுத்து அந்த பூங்காவும் தற்காலிகமாக மூடப்பட்டது.
இதனிடையே, டெல்லி பூங்கா, ஹாஸ் காஸ் பகுதியில் உள்ள மான் பூங்கா மற்றும் வேறு சில இடங்களில் மொத்தம் 8 பறவைகள் உயிரிழந்தன. இவற்றின் மாதிரிகளும் ஆய்வுக்கு அனுப்பி வைக்கப்பட்டன.
இந்த நிலையில், டெல்லியில் மக்களிடம் பறவை காய்ச்சல் பீதி அதிகரித்துள்ளது. டெல்லி மாநில அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சில அறிவிப்புகளை வெளியிட்டிருக்கிறது. அதில், ''ஆப்பாயில், அரைவேக்காடு இறைச்சி சாப்பிடாதீர்கள். இறைச்சியை நறுக்கும் போது முகமூடி அணிந்து கொள்ளுங்கள். இறந்து கிடக்கும் பறவைகளுக்கு அருகே செல்லாதீர்கள்'' என பல அறிவுரைகள் கூறப்பட்டுள்ளன
மேலும் உத்தரப்பிரதேசம், ராஜஸ்தான் உள்ளிட்ட வட மாநிலங்களிலும் பறவைக்காய்ச்சல் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. அதனை தடுக்க மாநில அரசுகளும், வனவிலங்குகள் சரணாலயங்களும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.