டெல்லியில் ஜனாதிபதி ஆட்சி பிப்ரவரி வரை நீடிப்பு: மத்திய அரசு முடிவு
டெல்லி: டெல்லியில் ஜனாதிபதி ஆட்சியை அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் வரை நீட்டிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
டெல்லியில் முதல்வராக இருந்த அரவிந்த் கேஜ்ரிவால் பதவி ஏற்ற 49 நாட்களில் ராஜினாமா செய்தார். இதனால் கடந்த பிப்ரவரி மாதம் அங்கு ஜனாதிபதி ஆட்சி பிரகடனம் செய்யப்பட்டு சட்டசபை செயல்படுவது தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது.
மீண்டும் ஆட்சி அமைக்க முயற்சி
இதனிடையே லோக்சபா தேர்தலில் படுதோல்வி அடைந்த கேஜ்ரிவால் மீண்டும் டெல்லியில் ஆட்சி அமைக்கும் முயற்சியில் ஈடுபட்டார். இதே போல் பாரதிய ஜனதாவும் ஆட்சி அமைக்க முயற்சி செய்தது.
கெட்ட பெயர் அச்சம்
இதில் எம்.எல்.ஏ.க்கள் கட்சி மாறினால் தான் எந்த கட்சியாலும் ஆட்சி அமைக்க கூடிய சூழ்நிலை ஏற்பட்டது. அது எம்.எல்.ஏ.க்களை விலை கொடுத்து வாங்கியது போல் ஆகி பொதுமக்கள் மத்தியில் கெட்ட பெயர் வந்து விடும் என்பதால் எந்த கட்சியும் ஆட்சி அமைக்கவில்லை.
முடிவடையும் ஜனாதிபதி ஆட்சி
இந்த நிலையில் 6 மாத ஜனாதிபதி ஆட்சி காலம் இந்த மாதத்துடன் முடிவடைகிறது. இதனால் அங்கு சட்டசபை தேர்தல் நடத்தப்படுமா? அல்லது ஜனாதிபதி ஆட்சி நீடிக்கப்படுமா? என்ற கேள்வி எழுந்தது.
6 மாதம் நீட்டிப்பு?
ஆனால் டெல்லியில் இப்போது தேர்தல் நடத்தும் எண்ணம் இல்லை. ஜனாதிபதி ஆட்சியை வருகிற 2015-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் வரை மேலும் 6 மாதங்களுக்கு நீடிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக தெரிகிறது.
இடைத்தேர்தல் பாடம்
மத்தியில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு பாரதிய ஜனதா ஆட்சிக்கு வந்து 100 நாளில் நேற்று வெளியான இடைத் தேர்தல் முடிவுகள் ஆளுங்கட்சிக்கு சாதகமாக இல்லை. எனவே தான் மத்திய அரசு தற்போதைக்கு டெல்லி சட்டசபைக்கு தேர்தல் நடத்தும் எண்ணத்தில் இல்லை.
எனவே ஜனாதிபதி ஆட்சி விலக்கிக் கொள்ளப்பட மாட்டாது. பிப்ரவரி வரை மேலும் 6 மாதங்களுக்கு நீடிக்கப்படும் என்று தெரிகிறது.