இந்த ரிக்ஷாக்காரர் செய்ததில் தப்பே இல்லை.. நீங்க என்ன சொல்றீங்க?
டெல்லி: டெல்லியில் ஒரு ரிக்ஷாக்காரர் செய்த செயல் வைரல் வீடியோவாகியுள்ளது.
டெல்லியில் பெய்த கன மழையால் பல தாழ்வான பகுதிகளில் மழை நீர் தேங்கி குளம் போலக் காணப்பட்டது. இதனால் பல பகுதிகளில் போக்குவரத்து நெருக்கடியும் ஏற்பட்டது.
இந்த நிலையில் முந்த்கா மெட்ரோ ரயில் நிலையப் பகுதியில் ஒரு ரிக்ஷாக்காரர் செய்த செயல் அப்பகுதியில் இருந்தவர்களை என்னா ஒரு பிசினல் மூளையப்பா என்று வியக்க வைத்தது, ஆனால் பலரை புலம்பவும் வைத்தது.
நடந்தது இதுதான்.. ரயில் நிலையத்தை ஒட்டியுள்ள சின்ன தெரு அது. அங்கு தண்ணீர் தேங்கிக் கிடந்தது. கலங்கலாக காணப்பட்ட தண்ணீர் அது. கணுக்கால் வரை தண்ணீர் தேங்கியிருந்தது. அதைப் பொருட்படுத்தாமல் பலர் அதில் நடந்து போகத்தான் செய்தனர். ஆனால் அதில் கூட நடக்க விரும்பாத, நடக்க பிடிக்காத பலர் காத்திருந்து விழித்ததைப் பார்த்தார் அந்த ரிக்ஷாக்காரர்.
உடனடியாக அவர்களிடம் அந்த பிளாட்பாரத்துக்குக் கொண்டு போய் விடுகிறேன், தலைக்கு 5 ரூபாய் கொடுங்க என்றார். இதைக் கேட்டு அதிர்ந்தாலும் தண்ணீரில் கால் வைக்கப் பிடிக்காத பலர் 5 ரூபாய் கொடுத்து இந்த பிளாட்பாரத்திலிருந்து சில மீட்டரே உள்ள அந்த பிளாட்பாரத்திற்கு போய் இறங்கிக் கொண்டனர்.
செம காமெடியாக உள்ள இந்த காட்சி அடங்கிய வீடியோ தற்போது வைரல் ஆகியுள்ளது.