மறக்கவா முடியுமா?ரூபாய் நோட்டு செல்லாது அறிவிப்பால் பத்திரிகைகளை வெளியிடுவதையே நிறுத்திய மணிப்பூர்!
ரூபாய் நோட்டு செல்லாது அறிவிப்பால் பத்திரிகைகளை வெளியிடுவதையே நிறுத்தியிருந்தது மணிப்பூர்.
இம்பால்: ரூபாய் நோட்டு செல்லாது அறிவிப்பால் மணிப்பூரில் கடந்த ஆண்டு நவம்பரில் சில நாட்கள் பத்திரிகைகளை வெளியிடுவதே நிறுத்தி வைக்கப்பட்ட பேரவலம் அரங்கேறியது.
பிரதமர் நரேந்திர மோடி கடந்த நவம்பர் 8-ந் தேதி திடீரென ரூ500 மற்றும் ரூ1,000 நோட்டுகள் செல்லாது என அறிவித்தார். இந்தியா முழுவதுமே அறிவிக்கப்படாத பொருளாதார எமர்ஜென்சியை எதிர்கொள்ள நேரிட்டது.
பரிதவித்த தொழிலாலர்கள்
நாட்டின் அத்தனை மாநிலங்களிலும் ஒவ்வொரு வகையான துயரங்கள். அஸ்ஸாம் மாநிலத்தில் தேயிலைத் தொழிலாளர்களுக்கு ஊதியம் தர முடியாத நிலை ஏற்பட்டது.
பத்திரிகைகள் பாதிப்பு
மியான்மர், பூட்டான் எல்லைகளில் இந்திய குடிமக்களே அந்த நாடுகளின் கரன்சியை பயன்படுத்துகிற நிலைமை ஏற்பட்டது. மணிப்பூரிலோ உச்சகட்ட துயரம் ஏற்பட்டது. புதிய ரூ500, ரூ2,000 நோட்டுகள் அம்மாநிலத்துக்கு சென்றடையவில்லை. இதனால் பத்திரிகைகளுக்கு விளம்பரதாரர்கள் பணம் தர முடியாத நிலை ஏற்பட்டது.
பத்திரிகையார்கள் பாதிப்பு
மணிப்பூரில் பெட்ரோல், சமையல் எரிவாயு சிலிண்டர்கள் விலை மிக மோசமாக உயர்ந்தன. ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ300க்கு விற்பனையானது. அதனால் பத்திரிகையாளர்கள் பணி செய்ய முடியாத நிலைமைக்கு தள்ளப்பட்டனர்.
உச்ச துயரம்
ஒருகட்டத்தில் நிலைமையை சமாளிக்க முடியாத பத்திரிகை நிறுவனங்கள், சில நாட்கள் பத்திரிகைகள் வெளியிடுவதை நிறுத்துவதாகவும் அறிவித்தனர். இயல்பு நிலைமை திரும்பும் வரையில் பத்திரிகைகள் வெளிவரவில்லை என்பது ரூபாய் நோட்டு செல்லாது அறிவிப்பின் உச்ச துயரங்களில் ஒன்று.