லோக்சபாவிற்கு இப்போது தேர்தல் நடந்தால் 360 இடங்களில் பாஜக கூட்டணி வெல்லும்- இந்தியா டுடே போல்
மத்திய அரசின் செல்லாத ரூபாய் நோட்டு அறிவிப்புக்குப் பின்னர் பிரதமர் மோடியின் செல்வாக்கும், மதிப்பும் நாட்டு மக்கள் மத்தியில் உயர்ந்துள்ளதாக கருத்து கணிப்பு ஒன்று தெரிவித்துள்ளது.
டெல்லி: லோக்சபாவிற்கு இப்போது தேர்தல் நடந்தாலும் தேசிய ஜனநாயகக் கூட்டணி 360 இடங்களில் வென்று ஆட்சியை தக்கவைக்கும் என்றும், பாஜக மட்டுமே தனியாக 305 இடங்களை கைப்பற்றும் என்றும் இந்தியா டுடே நடத்திய கருத்து கணிப்பில் தெரிவித்துள்ளது.
நாடுமுழுவதும் கறுப்பு பணம், கள்ள பணத்தை ஒழிக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்களை திரும்ப பெற்றுக்கொள்வதாக பிரதமர் மோடி அறிவித்தார்.
நாடு முழுவதும் வங்கிகளிலும், ஏடிஎம் வாசல்களிலும் கூட்டம் கூட்டமாக மணிக்கணக்கில் மக்கள் காத்துக்கிடந்தனர். சம்பாதித்த பணத்தை செலவு செய்ய முடியலையே என்ற மன உளைச்சலில் கூட பலர் உயிரிழந்தனர். பெட்டி பெட்டியாக அடுக்கி வைத்திருந்தவர்களின் தூக்கம் பறிபோனது.
மோடியையும், பாஜக அரசையும் எதிர்கட்சியினர் கடுமையாக விமர்சனம் செய்தனர். 75 நாட்களுக்குப் பின்னர் சற்றே நிலைமை சீரடைந்து வருகிறது. இந்த நிலையில் இந்தியா டுடே சமீபத்தில் கருத்து கணிப்பு ஒன்றை நடத்தியுள்ளது.
கருத்து கணிப்பு
உயர் பண மதிப்பு நீக்க அறிவிப்பு நாடு முழுவதும் மோடியின் செல்வாக்கை உயர்த்தியுள்ளது என்று அந்த கருத்துக்கணிப்பில் தெரியவந்துள்ளது. டிசம்பர் 30ஆம் தேதிக்குப் பிறகு ஜனவரி 9 ஆம் தேதி வரை நாடு முழுவதும் 19 மாநிலங்களில் இந்திய டுடே கருத்துக் கணிப்பு நடத்தப்பட்டுள்ளது.
சிறந்த பிரதமர்
நாட்டின் சிறந்த பிரதமராக மோடி உள்ளதாக 65 சதவிகிதம் மக்கள் தெரிவித்துள்ளனர். இது கடந்த ஆகஸ்ட் மாதம் எடுக்கப்பட்ட கருத்துக்கணிப்பை விட அதிகமாகும். அதே நேரத்தில் ராகுல் காந்திக்கு 10 சதவிகிதம் பேர் மட்டுமே ஆதரவு தெரிவித்துள்ளனர்.
பாஜகவே ஆட்சியை கைப்பற்றும்
லோக்சபாவிற்கு இப்போது தேர்தல் நடந்தாலும் தேசிய ஜனநாயகக் கூட்டணி 360 இடங்களில் வெல்லும் என்றும் கூறப்பட்டுள்ளது. காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணிக்கு 60 இடங்கள் வரை மட்டுமே கிடைக்கும் என்றும் அந்த கருத்துக்கணிப்பில் கூறப்பட்டுள்ளது.
வாக்குகள் எவ்வளவு?
தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு 42 சதவிகித வாக்குகளும், காங்கிரஸ் கூட்டணிக்கு 25 சதவிகித வாக்குகளும் கிடைக்கும் என்றும் பிற கட்சிகளுக்கு 33 சதவிகித வாக்குகள் கிடைக்கும் என்றும் ஆய்வில் தெரிய வந்துள்ளது.