மீண்டும் 'கொரோனா' மையமாகும் ஹரித்வார்.. மகாளய அமாவாசை நாளில் பல்லாயிரக்கணக்கில் குவிந்த பக்தர்கள்!
ஹரித்வார்: மகாளய அமாவாசை நாளான நேற்று ஹரித்வார் கங்கை நதியில் புனித நீராட பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர். கட்டுப்பாடுகள் எதனையும் கடைபிடிக்காமல் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் ஒன்று திரண்டதால் மீண்டும் கொரோனா பரவல் மையமாக ஹரித்வார் உருவெடுக்கும் அபாயம் எழுந்துள்ளதாக சமூக ஆர்வலர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.
உலக நாடுகளை முடக்கி வைத்திருக்கும் கொரோனா வைரஸ் இந்தியாவையும் கடுமையாக பாதித்துள்ளது. கொரோனா முதலாவது அலை சற்றே ஓய்ந்த நேரத்தில் ஹரித்வாரில் கும்பமேளா நடத்த அனுமதி தந்தது உத்தரகாண்ட்டில் ஆளும் பாஜக அரசு.
கும்பமேளாவில் 5 நாட்களில் 2,167 கொரோனா பாதிப்புகள்- பேரபாயத்தை நெருங்கும் ஹரித்வார் புனித நகரம்!
ஹரித்வார் கும்பமேளா
ஹரித்வார் கும்பமேளா என்பது 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறக் கூடியது. அதனால் ஒவ்வொரு நாளும் பல லட்சக்கணக்கான பக்தர்கள் புனித நீராடுவர். அத்துடன் நாடு முழுவதும் இருந்து சாதுக்கள் ஹரித்வாரில் ஒன்று திரண்டு நிர்வாண ஊர்வலம் நடத்தி புனித நீராடுவதும் வழக்கம்.
பிரதமர் மோடி தலையீடு
ஆகையால் கொரோனா பரவல் விஸ்வரூபம் எடுக்கும் என்பதை சுட்டிக்காட்டி கும்பமேளாவுக்கு அனுமதிக்க கூடாது என மருத்துவ வல்லுந்நர்கள் எச்சரித்திருந்தனர். ஆனால் இந்த எச்சரிக்கையையும் மீறி உரிய பரிசோதனைகள் நடத்தப்பட்டு கொரோனா கால கட்டுப்பாடுகள் பின்பற்றி புனித நீராட அனுமதிக்கப்படுவதாக உத்தரகாண்ட் அரசு தெரிவித்தது. இருந்த போதும் ஹரித்வாரில் கொரோனா பரவல் அதிகரித்து வந்தது. இதையடுத்து பிரதமர் மோடி தலையிட்டு கும்பமேளாவை நிறுத்துமாறு வேண்டுகோள் விடுத்தார். இதனால் கும்பமேளா நிகழ்வுகள் முன்கூட்டியே முடிக்கப்பட்டன.
கொரோனா பரிசோதனை மோசடி
அண்மையில் கும்பமேளா காலத்தில் கொரோனா பரிசோதனைகள் நடத்தப்பட்டதாக கூறப்பட்டதில் மிகப் பெரிய அளவில் மோசடிகள் நடந்தது அம்பலமானது. ஹரித்வாரில் கும்பமேளா காலத்தின் போது 2 தனியார் ஆய்வகங்கள் நடத்திய கொரோனா பரிசோதனைகளில் 1 லட்சத்துக்கும் அதிகமானவை போலியானவை என்கிற தகவல் நாட்டை அதிரவைத்தது. பெயருக்கு கொரோனா பரிசோதனை நடத்தி பெரும்பாலானோருக்கு நெகட்டிவ் சான்றிதழ்கள் வழங்கி இருக்கின்றனர் என்பதும் தெரியவந்தது. இது தொடர்பாக விசாரணைகளும் நடத்தப்பட்டன.
கொரோனா 3-வது அலை அச்சம்
தற்போது நாடு முழுவதும் ஓரளவுக்கு கொரோனா பரவல் கட்டுக்குள் இருக்கிறது. ஆனா கேரளா, மகாராஷ்டிரா, மிசோரம், தமிழகத்தில் தொடர்ந்து கொரோனா பரவல் சற்று கூடுதலாக இருக்கிறது. கொரோனா 3-வது அலை குறித்த அச்சமும் மக்களிடமும் இருக்கிறது. கொரோனா 3-வது அலையை எதிர்கொள்ளும் வகையில் நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசிகள் முழு வீச்சில் போடப்பட்டும் வருகின்றன.
ஹரித்வாரில் திரண்ட பக்தர்கள்
இந்நிலையில் மகாளய அமாவாசை நாளான நேற்று ஹரித்வார் கங்கை நதியில் புனித நீராட பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் ஒன்று கூடினர். வழக்கம் போல கொரோனா கால கட்டுப்பாடுகளை காற்றில் பறக்கவிட்டு பக்தர்கள் புனித நீராடினர். கொரோனா 3-வது அலை எப்போது வேண்டுமானாலும் தாக்கலாம் என்கிற சூழலில் ஒரே இடத்தில் ஒரே நேரத்தில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கொரோனா கட்டுப்பாடுகளை தூக்கி எறிந்துவிட்டு கங்கையில் புனித நீராடி இருக்கின்றனர். இதனை உத்தரகாண்ட் பாஜக அரசும் கட்டுப்படுத்தாமல் விட்டுவிட்டது. இதனால் மீண்டும் கொரோனா பரவல் மையமாக புனித நகரமான ஹரித்வார் உருவெடுக்குமோ என்கிற அச்சத்தை வெளிப்படுத்துகின்றனர் சமூக ஆர்வலர்கள்.