மேக வெடிப்பு, நிலச்சரிவு ,பலர் மாயம்.. தர்மசாலாவில் திடீர் வெள்ளப் பெருக்கு.. என்ன காரணம்
சிம்லா: ஹிமாச்சல பிரதேச மாநிலத்தின் தர்மசாலாவில் பகுதிகளில் மேக வெடிப்பு கனமழை கொட்டித் தீர்த்து வருகிறது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.
வடகிழக்கு மாநிலங்களில் கடந்த 10ஆம் தேதி தென்மேற்கு பருவமழை தொடங்கியது. இதனால் கடந்த சில நாட்களாகவே வட மாநிலங்களில் நல்ல மழை பெய்து வருகிறது.
இந்நிலையில், இமாச்சல் பிரதேசம் மாநிலத்தில் முக்கிய சுற்றுலாத் தலமான தர்மசாலாவில் கடந்த சில மணி நேரங்களாகக் கனமழை கொட்டித் தீர்த்து வருகிறது.
|
மேக வெடிப்பு
மேக வெடிப்பு காரணமாகக் கனமழை பெய்து வருவதாகவும் இதுவரை 3000 மிமீ மழை அங்குப் பதிவாகியுள்ளது. இந்த கனமழை காரணமாக பல்வேறு இடங்களிலும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. வெள்ளப்பெருக்கு காரணமாக உயிரிழப்பு ஏற்பட்டுள்ளதா என்பது குறித்து தகவல் எதுவும் வெளிவரவில்லை. அதேநேரம் இதில் பல வீடுகள் முற்றிலுமாக அடித்துச் செல்லப்பட்டுள்ளன.
|
அடித்துச் செல்லப்பட்ட வாகனங்கள்
கனமழையால் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கில் சாலைகளில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார் போன்ற வாகனங்கள் அடித்துச் செல்லும் வீடியோக்களும் ட்விட்டரில் வைரலாகியுள்ளது. கொரோனா ஊரடங்கில் தற்போது தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், டெல்லியிலிருந்து பலரும் தர்மசாலாவுக்கு சென்றுள்ளனர். கனமழை காரணமாக அவர்கள் டெல்லி திரும்ப முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
|
விமான நிலையம் மூடல்
இமாச்சல் பிரதேச பகுதியில் வானிலை மிக மோசமாக உள்ளதால் தர்மசாலா விமான நிலையம் மூடப்பட்டுள்ளது. அங்கு வரும் அனைத்து விமானங்களும் அருகிலுள்ள மற்ற விமான நிலையங்களுக்குத் திருப்பி விடப்பட்டுள்ளன. கனமழையால் சிம்லா தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் நூற்றுக்கணக்கான சுற்றுலா பயணிகள் சாலைகளிலேயே சிக்கியுள்ளனர்.

2 பேர் மாயம்
காங்க்ரா என்ற மற்றொரு இடத்திலும் மேகவெடிப்பு ஏற்பட்டுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. காங்க்ரா பகுதியில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ள நிலையில் இருவர் மாயமாகியுள்ளதாக என ஏஎன்ஐ செய்தி வெளியிட்டுள்ளது. தர்மசாலா அருகே பாயும் மஞ்சி நதியில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. நதியின் அருகிலுள்ள கடைகள், குடிசைகள் நீரில் அடித்துச் செல்லப்பட்டது.

அமித் ஷா
தர்மசாலா இருக்கும் நிலையைத் தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும் மீட்புப் பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளதாகவும் உள்துறை அமைச்சர் அமித் ஷா ட்வீட் செய்துள்ளார். மேலும், இது தொடர்பாக இமாச்சல் பிரதேச முதல்வர் ஜெய் ராம் தாக்கூருடன் ஆலோசனை நடத்தியதாகவும் அவர் தெரிவித்தார். மீட்புப் பணிகளுக்கு உதவும் வகையில் என்.டி.ஆர்.எஃப் குழுக்களை இமாசலத்திற்கு விரைந்துள்ளன.

உத்தரகண்ட்டில் நிலச்சரிவு
அண்டை மாநிலமான உத்தரகண்ட்டிலும் சாமோலி என்ற இடத்தில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இதனால் ரிஷிகேஷ்-பத்ரிநாத் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. அதேபோல ஜம்முவின் தோடாவிலும் கனமழை பெய்து வருகிறது. இதனால் அங்கு வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ஏன் ஏற்படுகிறது
இமயமலைப் பகுதிகளில் இதுபோன்ற பருவமழை வழக்கமான ஒன்று தான். இருப்பினும், காடுகள் தொடர்ந்து அழிக்கப்பட்டு வருவதால் சமீபத்திய காலங்களில் அங்கு வெள்ளப் பெருக்கு அதிகரித்துள்ளது. முன்னதாக கடந்த பிப்ரவரி 7ஆம் தேதி நந்தா தேவி பகுதியில் ஏற்பட்ட கடும் நிலச்சரிவு காரணமாக மிகப் பெரிய பேரழிவு ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.











Click it and Unblock the Notifications