சர்ஜிகல் தாக்குதல் நடத்தப்பட்ட ஆதாரத்தை வெளியிடுவது தேச நலனுக்கு எதிரானது: பாஜக
டெல்லி: பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இந்தியாவுக்குள் ஊடுருவி தாக்குதல் நடத்தும் சதித்திட்டத்துடன் பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக இந்திய ராணுவத்துக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து "சர்ஜிக்கல் ஸ்டிரைக்" என்ற அதிரடி தாக்குதலில் இந்திய ராணுவம் ஈடுபட்டு பாகிஸ்தான் பகுதியில் இருந்த பயங்கரவாதிகளின் 7 முகாம்களை அளித்தது. இந்த தாக்குதலின் போது பயங்கரவாதிகளுக்கு ஆதரவாக இருந்த பாகிஸ்தான் ராணுவத்தினரும் கொல்லப்பட்டனர்.
ஆனால், பாகிஸ்தான் சர்ஜிக்கல் ஸ்டிரைக் நடைபெறவில்லை என்றும் எல்லையில் அத்துமீறி துப்பாக்கிச்சூடு மட்டுமே நடைபெற்றதாகவும் சமாளித்து வருகிறது.
ந்த தாக்குதல் பற்றி காங்கிரஸ் கட்சியின் ப.சிதம்பரம், டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் முதலானோர் சந்தேகம் வெளிப்படுத்தினர். தாக்குதலுக்கான வீடியோ ஆதாரம் கேட்டார் கேஜ்ரிவால்.
இந்த நிலையில் இது குறித்து கருத்து தெரிவித்துள்ள காஷ்மீர் மாநில பாரதிய ஜனதா செய்தி தொடர்பாளர் வீரேந்திர குப்தா, போலி கவுரவத்திற்காக பாகிஸ்தான் தாக்குதல் நடைபெறவில்லை என்று கூறி வருவதாக தெரிவித்தார்.
பாஜக தேசிய செயலாளர் ஸ்ரீகாந்த் ஷர்மா கூறுகையில், ராணுவ ரகசியங்களை எப்படி வெளிப்படையாக தெரிவிக்க முடியும்? இது நாட்டின் பாதுகாப்புக்கு எதிரான செயல் அல்லவா.
மும்பை தீவிரவாத தாக்குதல், பதன்கோட் தாக்குதல், யூரி தாக்குதல்களில் பாகிஸ்தான் தீவிரவாதிகளுக்கு தொடர்புள்ளதாக ஆதாரங்களை இந்தியா கொடுத்தது. ஆனால் பதிலுக்கு எதுவுமே நடக்கவில்லை. எனவேதான், இந்தியா நடவடிக்கை எடுக்க தொடங்கியுள்ளது என்றார்.
உள்துறை இணை அமைச்சர் ஹன்ஸ்ராஜ் அகிர் கூறுகையில், ராணுவம் தாக்குதல் நடத்தியதற்கான ஆதாரங்கள் உள்ளன. அவை பிரதமரிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன. அதை அம்பலப்படுத்துவதா, வேண்டாமா என்பதை பிரதமர்தான் முடிவு செய்வார் என்றார்.