இவர்தான் உண்மையான தளபதி... பதவி விலகிய டி.கே. ஜோஷியின் மறுபக்கம்!
டெல்லி: இந்தியக் கடற்படைத் தலைமைத் தளபதி பொறுப்பிலிருந்து அதிரடியாக விலகியுள்ள டி.கே.ஜோஷி, ஒரு அபாரமான வீரர் ஆவார். மிகவும் கடுமையான கடினமான கப்பல்களை நேர்த்தியாக ஓட்டிய அனுபவம் கொண்டவர். போர்க்களத்தில் முன்னின்று செயலாற்றிய திறமையாளர்.
அடுத்தடுத்து நடந்த போர்க்கப்பல்கள் விபத்தைத் தொடர்ந்து தார்மீகப் பொறுப்பேற்று ஜோஷி தனது பதவியிலிருந்து நேற்று திடீரென விலகி விட்டார்.
ஜோஷியின் மறுபக்கம் வியப்புக்குரியதாக உள்ளது.. காரணம், போர்க்களத்தில் முன்னின்று போர் புரிந்த ஒரு வீரர் அவர். அவரைப் பற்றிய சுவாரஸ்யமான தகவல்களின் தொகுப்பு...
எங்கு போனாலும் ஒரு மிடுக்கு
மிடுக்குடன் கூடிய ஒரு தளபதியாக திகழ்ந்தவர் ஜோஷி. தான் எங்கு பணியாற்றினாலும், எந்தப் பணியில் இருந்தாலும் அதைச் செவ்வனே செய்வதில் இவருக்கு நிகர் இவர்தானாம்.
தப்பு செய்தா பிச்சிருவார்...
தவறுகளைக் கண்டால் இவருக்குப் பிடிக்கவே பிடிக்காதாம். தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்களை சும்மா விட மாட்டாராம். கடைசியில் தனது தலைமையின் கீழ் அடுத்தடுத்து போர்க்கப்பல்கள் விபத்தில் சிக்கியதால் சற்றும் தாமதியாமல் தனது பதவியையே உதறியுள்ளார். இதன் மூலம் தனக்கொரு நியாயம், மற்றவர்களுக்கு ஒரு நியாயம் என்ற பாரபட்சத்தையே அவர் இல்லாமல் செய்து விட்டார்.
தைரியம் மிக்கவர்
ஜோஷி குறித்து முன்னாள் கடற்படைத் தலைமைத் தளபதி அருண் பிரகாஷ் கூறுகையில், யாரிடமும் பொறுப்பைத் தள்ளி விடாத நேர்மையான, தைரியமான தளபதி ஜோஷி. இந்தியாவில் இப்படிப்பட்டவர்களைக் காண்பது மிகவும் அரிது.
நடந்தது சாதாரண விபத்துதான்
தற்போது நடந்தது எல்லாமே சாதாரண விபத்துதான். கப்பல்கள் உரசிக் கொள்வது, அலை அதிகமாக இருக்கும்போது கப்பல்கள் மோதிக் கொள்வது எல்லாம் சாதாரண விஷயம்தான். இதற்கு தலைமைத் தளபதி பொறுப்பேற்க வேண்டிய அவசியமே இல்லை. ஆனாலும் ஜோஷி இதற்குப் பொறுப்பேற்றுள்ளார்.
இவரிடமிருந்து அரசியல்வாதிகள் பாடம் படிக்க வேண்டும்
ஜோஷியைப் பார்த்து நமது நாட்டு அரசியல்வாதிகளும், அதிகார வர்க்கத்தினரும் பாடம் கற்றுக் கொள்ள வேண்டும் என்றார்.
1974 முதல்
1974ம் ஆண்டு ஏப்ரல் மாதம் கடற்படையில், பணியில் சேர்ந்தவர் ஜோஷி. இவர் நீர்மூழ்கிக் கப்பல்களுக்கு எதிரான போர் முறையில் மிகச் சிறந்த வல்லுநர் ஆவார். பல போர்க்கப்பல்களை செலுத்தியுள்ளார்.
ஐஎன்எஸ் விராத்தை ஓட்டியவர்
இந்தியாவின் மிகப் பெரிய விமானம் தாங்கிக் கப்பல் என்ற பெருமை கொண்ட ஐஎன்எஸ் விராத் போர்க்கப்பலை ஓட்டியவர். பல கடினமான கப்பல்களையும் ஓட்டிய அனுபவம் கொண்டவர்.
அமெரிக்காவில் படித்தவர்
அமெரிக்காவில் உள்ள நேவல் வார் கல்லூரியில் படித்தவர். இவர் அடிப்படையில் நல்ல வீரர் ஆவார். புத்திசாலித்தனமாக எதையும் செய்பவர். இவருடன் ஒத்துப் போவதுதான் பல அதிகாரிகளுக்கு பிரச்சினையாக இருந்ததாம். காரணம் முகத்துக்கு முகம் நேரடியாக எதையும் சொல்லி விடுவாராம்.
அடுத்து வரப் போவது யார்
அடுத்து இவரது இடத்திற்கு வரப் போவது யார் என்பதுதான் பெரிய கேள்விக்குறியாக உள்ளது. தற்காலிகமாக துணைத் தளபதி தோவனிடம் பொறுப்பு கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால் இவர் மே 31ம் தேதியுடன் ஓய்வு பெறவுள்ளார்.
அனில் சோப்ராவுக்கு வாய்ப்பு
இருப்பினும் கிழக்கு கடற்படை கமாண்ட் தளபதி வைஸ் அட்மிரல் அனில் சோப்ராவுக்கு வாய்ப்புள்ளதாக தெரிகிறது. அதேபோல மேற்கு பிராந்திய தளபதி வைஸ் அட்மிரல் சேகர் சின்ஹாவுக்கும் வாய்ப்புள்ளது. இவர் சோப்ராவை விட சீனியர். என்ன விசேஷம் என்றால் சின்ஹாவின் மேற்கு பிராந்தியப் பகுதியில்தான் பெரும்பாலான கப்பல் விபத்துக்கள் நடந்துள்ள என்பதே.
அவர் போகவில்லை.. இவர் போய் விட்டார்
ஆனால் சின்ஹா இதுவரை இதுகுறித்து வாயே திறக்கவில்லை. ஆனால் ஜோஷி அதிரடியாக பதவி விலகிப் போய் விட்டார்.